உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஆவணங்களில் மாற்றம்

EASTER ATTACK
EASTER ATTACK

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்றைய தினம் மற்றும் நேற்று முன்தினம் சாட்சியமளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் சாட்சியமளிக்கப்படவுள்ளது.

பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம். லஹிரு பிரதீப் உதயங்க தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தாக பொலிஸ் முறைபாட்டு புத்தகத்தில் பதிவிடுமாறு கொழும்பு வடக்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சிவ பண்டார தமக்கு அழுத்தங்களை பிரயோகித்தாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான பொறுப்பதிகாரி சஞ்ஜீவ பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த மாற்றத்தை செய்ய பொலிசாரிற்கு அறிவுறுத்தியதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த கருணாரட்ன நேற்றைய தினம் சாட்சியமளித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் ஆவணங்களுக்கு பொறுப்பான கான்ஸ்டபிள் நளின் பண்டார நேற்று ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த பின்னரே தகவல் கிடைக்கப்பெற்றதாகவும் ஆனால் அந்த ஆவணம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் கிடைத்தாக ஆவண புத்தகத்தில் பதிவிடுமாறு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மஹிந்த கருணாரத்ன தனக்கு அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

குறித்த கடிதத்தை வழங்கும் போது எவரும் அது குறித்து அறிந்திருக்கவில்லை எனவும் ஆகவே அதனை இரகசியமாக கையாளுமாறும் அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வடகொழும்புக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜிவ பண்டார மற்றும் அவருடைய தனிப்பட்ட உதவியாளர் உபேந்திர என்பவர் தனது கையடக்க தொலைப்பேசிக்கும், பொலிஸ் நிலையத்தின் நிலையான தொலைப்பேசிக்கும் அழைத்து குறித்த தகவல்களை ஆவண புத்தகத்தில் பதிவிட்டீர்களா என்பது தொடர்பில் வினவியதாக தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரியின் வற்புறுத்தலுக்கமைய தனக்கு அதை செய்ய வேண்டி ஏற்பட்டதாக நளின் பண்டார தெரிவித்தார்.

அவரையடுத்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.சிறிசேன சாட்சி வழங்கினார்.

புனித லூசிய தேவாலயத்திற்கு கடமைக்காக சென்ற போது அதாவது காலை 6.15 அளவில் கையொப்பம் இட்டு சென்றதாகவும் அதனை அடுத்து குண்டு வெடித்ததன் பின்னர் முற்பகல் 8.45 க்கு பொலிஸ் நிலையத்திற்கு வந்து அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று நேரத்தை 9.45 என பதிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து நேரங்களும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மஹிந்த கருணாரத்னவின் வேண்டுகோளுக்கமைய மறுபடியும் மாற்றியதாக கூறினார்.

முன்னாள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த கருணாரத்ன 21 ஆம் திகதி தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் தொடர்பான எந்தவொரு கடிதமும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் 21ம் திகதி இரவு 9 மணியளவில் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜிவ பண்டார கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு வந்து, தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப முடியாமல் போனதாகவும், அது தனது தனிப்பட்ட உதவியாளரினால் காணாமல் போனதாக தெரிவித்து, அதை பதிவுப் புத்தகத்தில் சேர்க்கும்படி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜிவ பண்டார வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே இதனை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று (14) காலை 9.30 மணிக்கு மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.