“எச் சந்தர்ப்பத்திலும் மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளாத கொள்கைத் தெளிவுடன் பயணித்த உங்களின் வருகை எமது கட்சிக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த எமது இனத்தின் மீட்சிக்கும் வழிகோலும்” என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை அரசியலுக்கு வருமாறு பகிரங்கமாக அழைத்துள்ளார்.
11-09-2019 அன்று புதன் கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி சந்திப்பு மாவட்ட செயற்குழு பொறுப்பாளர் பாமகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருந்தவபாலன் அவர்கள் எமது கட்சியில் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைப் பொறுப்பாளர்களாக போராளிகள் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வெவ்வேறு துறைகளில் சிறந்தவர்களாக விளங்கும் போராளிகளின் சேவை தமிழ்ச் சமூகத்துக்கு இன்று மிகவும் தேவை என்றார். உள்ளுராட்சி சபைகளில் இருந்து பாராளுமன்றம் வரை தமிழ் மக்கள் கூட்டணியானது போராளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கும் என பாமகன் தெரிவித்த கருத்தையும் அருந்தவபாலன் ஆமோதித்தார்.
அரசியலில் ஈடுபடுவதனால் போராளிகளுக்கு யாரிடமிருந்தாவது இடையூறுவருமாக இருந்தால் சட்டரீதியான பாதுகாப்பை வழங்குவதற்கு நானும் எமது கட்சியும் முன்னிற்போம் என கட்சியின் செயலாளர் நாயகம் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார்.