சுமந்திரனின் செயற்பாடுகளால் கூட்டமைப்புக்கு பாரிய சரிவு

velukumar
velukumar

சுமந்திரன் தனது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு ஏற்கெனவே பாரிய சரிவுகளை ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் ஏற்படும் அரசியல் விபரீதங்களுக்கு சுமந்திரனே பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த தென்னிலங்கையிலும், மலையகத்திலும் போட்டியிடுவது தொடர்பில் சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இன்று (02) பதிலளிக்கையில்;

“தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும், எல்லா தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய ஜனநாயக உரிமை இருக்கின்றது. அந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால்கூட அதனை நாம் எதிர்க்கப்போவதில்லை.

எனினும், நடைமுறை அரசியலை புரிந்துகொண்டு – களநிலவரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதே சாலச்சிறந்ததாகும். குறிப்பாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணம், நுவரெலியா போன்ற பகுதிகளில் தமிழக் கட்சிகளுக்கிடையில் பலமுனைப் போட்டி நிலவினால்கூட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கும், அரசியல் இருப்புக்கும் சிக்கல் வரப்போவதில்லை.

ஆனால் கண்டி, பதுளை, அம்பாறை, திருகோணமலை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழர் தரப்பு பல அணிகளாக பிரிந்துநின்று போட்டியிட்டால் அது ஆங்காங்கே உள்ள தமிழ் வாக்குகளை சிதறடித்து, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல் செய்து, எதிரிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துவிடும்.

ஆகவே, இம்மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஒரு தரப்பு பெற்றால் மட்டுமே பிரதிநிதித்துவம் உறுதியாகும் என்ற யதார்த்த நிலைமையை சுமந்திரன் போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியானது தனது அரசியல் தளத்தில் பலமாகவே இருக்கின்றது. மக்களும் கூட்டணியின் தேவையை உணர்ந்துவிட்டதால், எந்த கட்சி, எந்த வடிவில் போட்டியிட்டாலும் இம்முறை எமது வெற்றியை தடுக்கமுடியாது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.

ஆனால், கடந்த காலங்களில் புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுப்புகளுடனும் செயற்பட்ட தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான தமிழ்க் கட்சிகள் பிரிந்து நின்று மோதிக்கொண்டால் அது பேரினவாதிகளுக்கு வலிந்துசென்று தீணிபோடுவதாக அமைந்துவிடும்.

போர் முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ மூலமே தமிழ் மக்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். நெருக்கடியான சூழ்நிலைகளில் ஓரணியில் திரண்டு குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையைில் ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களை அரசியல் ரீதியில் அநாதைகளாக்குவதற்கு சில தரப்புகள் காத்திருக்கின்றன. அத்தகையசூழ்நிலைஉருவாக இடமளிக்ககூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சிப் பதவியை வகித்த போதுகூட தெற்கில் உரிய வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காத சுமந்திரன், யதார்த்தம் புரியாமல் தேர்தல்கள் பற்றி அறிவிப்பு விடுத்து வருகிறார்.

உண்மையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தாம் சந்திக்கின்ற பலத்த எதிர்ப்புகளாலும், மக்கள் மத்தியிலான செல்வாக்கு சரிவுகளாலும் தாம் எதிர்கொள்ள கூடிய வாக்கு சரிவுகளை சரி செய்யவே தெற்கில் போட்டியிடும் எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த முறை கூட்டமைப்பு பெற்ற இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் இம்முறை கிடைக்காது என சுமந்திரன் நன்கறிவார். ஆகவே தமது தேசிய பட்டியலுக்கான வாக்குகளை அதிகரிக்கும் ஒரே உத்தேசம் மட்டுமே அவருக்கு இருக்கின்றது.

தமது இந்த வாக்கு வேட்டையால், தமிழ் வாக்குகள் சிதறி அதன் மூலம் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் பிரதிநிதித்துவங்களை இழந்தாலும் அதுபற்றிய எந்த சமூக பொறுப்பும் அற்ற அரசியல்வாதியாக சுமந்திரன் மாறியுள்ளார் என்பதை தமிழ் வரலாறு பதிவு செய்கிறது.

இதைத் தவிர தெற்கில் நிலவும் அரசியல், சமூக கள நிலவர பின்னணியில் தெற்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆற்றக்கூடிய எந்த ஒரு பணியும் கிடையாது என்பதை சிறு குழந்தையும் அறியும்.

சுமந்திரன் தனது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு ஏற்கெனவே பாரிய சரிவுகளை ஏற்படுத்தி உள்ளார். அந்த வரிசையில் அவரது அடுத்த மிக மோசமான முடிவுதான் இந்த முடிவாகும்.

இதனால் ஏற்படும் அரசியல் விபரீதங்களுக்கு சுமந்திரனே பொறுப்பேற்க வேண்டும் என்பதை கூறி வைக்கிறேன்.” என தெரிவித்தார்.