கூட்டமைப்பு உறுப்பினர் கக்கிய ‘சாதி நஞ்சு’ – யாழ்.மாநகர சபையில் அமளி!

jaffna0
jaffna0

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் மாநகரசபையின் மாண்பை குறைக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களும் முரண்பட்டுக்கொண்டனர்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் (9) காலை நடைபெற்றது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரான ப.தர்சானந்தின் முகநூல் பதிவு தொடர்பில் இரு கட்சிகளும் முரண்பட்டுக்கொண்டனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கடும் சொற் பிரயோகங்களை பாவித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என தர்சானந் தனது முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக சபையில் யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்த பதிவில் நான் யாருடைய பெயரையோ சாதியையோ குறிப்பிடவில்லை’ என கூறி தர்சானந்த் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு. ரெமிடியஸ் தர்சானந்தின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை பாருங்கள் அவர் பிறந்தது 1988, 89 களாக தான் இருக்க வேண்டும்.

அக்கால பகுதியில் இந்திய இராணுவத்தின் குர்காஸ் படைகள் யாழ்ப்பாணத்தில் இருந்த காலப்பகுதி. நான் இராவண தோற்றமுடையவன். அவரிடம் திராவிட தோற்றமுண்டா? குர்காஸ் தோற்றமுடையவர்.’ என கூறினார். அதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

அதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் என பல உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறினார்கள்.

இந்நிலையில் கடும் கோபமுற்ற தர்சானந்த் வெளியே வாயா உனக்கு படிப்பிக்கிறேன் என ஈ.பி.டி.பி. உறுப்பினர் ரெமிடியஸினை விளித்து, இதான் நான் சொன்ன ‘குலத்தளவாம் குணம்’,

“இவரொரு முட்டாள் இதான் அவரின் குணம். இவர் ஒரு கஞ்சா வக்கீல்’ என கடுமையாக சட்டத்தரணி ரெமிடியஸினை நோக்கி தர்சானந்த் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட போது, ரெமிடியஸ், தர்சானந்த்தை நோக்கி தண்ணீர் போத்தலை வீச முற்பட்டார்.

இதனை அடுத்து ‘சபையின் மாண்பை நீங்கள் குறைத்து கொள்கின்றீர்கள். தயவு செய்து எல்லோரும் உட்காருங்கள்.’ என கூறி முதல்வர் ஆர்னோல்ட் ஒலிவாங்கியை நிறுத்தி வைத்தார்.

இதன் பின்னரும் உறுப்பினர்கள் வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டமையினால் ‘அமைதியாக இருக்காவிடின் எனது உத்தியோகத்தர்களை அழைத்து உங்களை சபையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன்’ என தர்க்கத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை முதல்வர் எச்சரித்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் சபை அமைதியானது.

இந்த விடயம் தொடர்பாக ப .தர்ஷானந்த் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு இப்படியான நாகரீகமற்ற பேச்சுக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பி இருந்தது ,இதற்கு பதிலளித்த சித்தார்த்தன் ,சம்பவம் தொடர்பில் தான் அறியவில்லை என்றும் ,இதுதொடர்பில் முழுமையாக அறிந்தபின் நடவடிக்கை எடுக்கவேண்டி இருப்பின் அதுபற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.