என்னை துரோகி என தெரிவிக்க தலைவருக்கு மாத்திரமே உரிமை உண்டு!

karuna1
karuna1

என்னை துரோகி என்று கூற எங்களுடைய தேசிய தலைவருக்கு மாத்திரமே உரிமை உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பிரிவில் நேற்று இடம்பெற்ற பொதுமக்கள் கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பல பிளவுகள் வந்து கொண்டிருப்தாக சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கும் கருத்துக்கள் தற்போது உலாவி வருகின்றது.

முன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பில் போட்டியிடுவதற்கு பெறுமதியான சொத்தை எழுதி தந்தால் தான் போட்டியிட வைப்பேன் என சுமந்திரன் கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தற்போது கூட்டமைப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேசியம் பேச ஒருவருக்கு மாத்திரமே உரிமையுள்ளது. அவர் தான் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. அவரைத் தவிர மட்டு அம்பாறையில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு உரிமையில்லை.

அவர்களுக்கு யுத்த களம் தெரியுமா? யுத்த களத்திற்கு தனது பிள்ளையை வழியனுப்பி வைத்த வேதனை தெரியுமா? இல்லாவிடின் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் வேதனை தெரியுமா?

இன்று மேதாவிகள் போல் தேசியம் பேசுகிறார்கள். அம்பாறையில் இருகின்ற அரசியல்வாதிகள் கஞ்சிகுடியாறு காட்டில் அரைவாசியை அழித்துவிட்டார்கள். அந்த மரங்களை உருவாக்குவதற்கு தலைவர் பல்லாயிரக்கணக்கான போராளிகளை ஈடுபடுத்தினார்.

எமது போராட்ட களம் மௌனித்த பின்னர் கூட்டமைப்பினரும் திசை மாறிவிட்டனர். கூட்டமைப்பினர் இருக்கும் மேடையில் தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூடாது என ஹரீஸ் தெரிவிக்கிறார். இவர்கள் எவ்வாறு கல்முனை பிரச்சினையை தீர்க்கப்போகிறார்கள். இவர்கள் எம் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நில தொடர்பற்ற முறையில் கல்வி வலயத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உருவாக்க முடியும் எனில் ஏன் அம்பாறை மாவட்டதில் சம்மாந்துறை கல்முனை, நாவிதன்வெளி பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஒரு கல்வி வலயத்தை உருவாக்க முடியாது? இது இங்கு இருக்கின்ற அரசியல் வாதிகளின் தவறு. இந்த பிரதேசங்களை உள்ளடக்கிய கல்வி வலயம் உருவாக்கபடுமானால் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும்.

இன்று கருணா அம்மான் துரோகி என்கின்றனர். அதை பற்றி நான் கவலைப்படுவதில்லை அது டொக்டர் பட்டம் மாதிரி தான் எனக்கு இருக்கிறது. கடந்த கால போராட்டம் நீடித்திருந்தால் நாம் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம். தற்போது அனைவரையும் காப்பாற்றியவர் நான் தான் இல்லாவிடின் இங்கு இருக்கின்ற அரசியல்வாதிகள் யாரும் வந்திருக்க முடியாது” என தெரிவித்தார்.