சிம்பாப்வே அணிக்கெதிரான இலங்கை அணி அறிவிப்பு!

image 112551df53
image 112551df53

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக பாகிஸ்தான் மண்ணில் விளையாடிய இலங்கை அணியிலிருந்து, இந்த அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காயத்திலிருந்து குணமடைந்துள்ள அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

மேலும், அனுபவ வீரர்களான அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் டில்ருவான் பெரேரா ஆகிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சுரங்க லக்மால் அணியின் வேகப் பந்துவீச்சு துறையை வழிநடத்தவுள்ளதுடன், பாகிஸ்தானில் சிறப்பாக பந்துவீசிய லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில், லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தடைக்கு உள்ளாகிய சிம்பாப்வே கிரிக்கெட் அணி, குறித்த தடைக்குப் பின்னர் இலங்கை அணியுடன் விளையாடவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே அவர்களது முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக அமைகின்றது.

அதோடு, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமே சிம்பாப்வே 2018ஆம் ஆண்டின் நவம்பரிற்குப் பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கின்றது.

இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 27ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. இரண்டு போட்டிகளுமே ஹராரே மைதானத்தில் நடைபெறுகின்றன.