பகிடிவதையினால் பட்டப்படிப்பை கைவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

bandula 1
bandula 1

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கான சட்ட மூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“பாதிக்கப்பட்ட மாணவர்களை மீள இணைப்பது தொடர்பிலான அறிவிப்பு ஒன்று அடுத்த வாரம் வெளியிடப்படும். பகிடிவதையின் தன்மை, பல்கலைக்கழக வசதியை பெற்றுக்கொள்ள தயாரான பட்டப்படிப்பு கற்கை நெறி தொடர்பான தகவல்களை இதற்காக சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் உண்மை தன்மை பரிசோதிக்கப்பட்டு நீதியான விசாரணைக்கு பின்னர் தான் விரும்பும் பல்கலைக்கழகத்துக்கு பிரவேசித்து பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இந்த மாணவர்களுக்கு கிடைக்கும்” என தெரிவித்தார்.

பகிடிவதையை எதிர்கொள்ள முடியாமல் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிய மாணவர்கள் சுமார் 2000 பேர் இருப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.