உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் சகாக்கள் இருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து அந் நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் 1979 ஆம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை நேற்று பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாவலபிட்டி – ஹப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த 30 வயதான மொஹம்மட் சலீம் அப்துல் சலாம், அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதான மொஹம்மட் சஹான் மொஹம்மட் றியாஸ் அகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் அவ்விருவரிடமிருந்தும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அறிக்கை பெறப்பட்டுள்ளது.
ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாடுகளில் இருந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் 6 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவருடன் சேர்த்து அவ் எண்ணிக்கை தற்போது எட்டாக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் சுமார் 65 பயங்கரவாத சந்தேக நபர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.