சர்வதேச சமூகம் எமக்கான தீர்வினை பெற்றுத்தராது – டக்ளஸ் தெரிவிப்பு

daglas
daglas

யுத்தத்தின் போது எம்மை கைவிட்டுச் சென்ற சர்வதேச சமூகம் ஒருபோதும் எமக்கான தீர்வுகளைப் பெற்றுத் தராது என டற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலங்கைக்குள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளால் எமக்கான தீர்வுகளை பெற்றுத் தரமுடியாது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தில் தீர்வு இருப்பதாக போலித் தமிழ் தேசியம் பேசுபவர்கள் சுயநலவாதிகளாவர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைகளுக்கும் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாமே நடைமுறைச் சாத்தியமான வழியில் முயற்சிக்க வேண்டும்.

இன ஐக்கியம், தேசிய நல்லிணக்த்தின் ஊடாகவே தேசிய அரசியல் பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண வேண்டும்.

அவ்வாறில்லாமல் சர்வதேச சமூகத்திடம் தீர்வு இருப்பதாகவும் கூறி தொடர்ந்தும் தமிழ் மக்களை தவறான பாதையில் இழுத்துச் சென்று மேலும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடுவதற்கும் இருக்கின்ற பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருப்பதற்குமே சுயநல அரசியல் தலைமைகள் முயற்சிக்கின்றனர்” என தெரிவித்தார்.