‘விடுதலைப் புலிகளைப் போல் அழிவீர்கள்’ : சிறீதரனின் பதிலால் மௌனமாகிய சம்பந்தன் !

 இரணைமடு
இரணைமடு

யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டத்தை தடுத்தால் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சம்பந்தன் எச்சரித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரணைமடு நீர்த்தேக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது தலைவர் தொடர்பாக மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்வது தொடர்பான சர்ச்சைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, வவுனியாவில்  விவசாயிகளுடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தன்னைத் தனியாக அழைத்து ‘ரோக்கியோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ளாததால்தான் விடுதலைப் புலிகள் அழிந்தார்கள்.  அதுபோல் இந்த அபிவிருத்தியைத் தடுத்தால் நீங்கள் அழிந்துபோவீர்கள்’ என்று எச்சரித்ததாகவும்  அதற்கு அந்த மாநாட்டிற்கு விடுதலைப்புலிகள் அழைக்கப்படவில்லை சரியாக ஆராய்ந்து பார்க்கும்படி தான் தெரிவித்தவுடன் சம்பந்தன் அவர்கள் அமைதியானார் என  சிறீதரன் அவர்கள் குறிப்பிட்டார்.

அதேவேளை, இரணைமடுக் குடிநீர்த்திட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற  உறுப்பினர்கள் தெளிவான எண்ணங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது துயரமான சம்பவம் என சிறீதரன் அவர்கள் குற்றஞ்சாட்டினார்.