ரெலோவிலிருந்து மூத்த உறுப்பினர் விலகல்!

vinthan
vinthan

தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக அக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் நாளை (22) வெளியிடவுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுரேந்திரன் குருசுவாமியை போட்டியிடுவதற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அதனையடுத்தே விந்தன் கனகரட்ணம் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து விலகுவதான அறிவிப்பை தலைமைக்குத் தெரிவித்துள்ளார்.

ரெலோவிலிருந்து விலகி விந்தன் கனகரட்ணம், வேறு கட்சியில் இணைவது தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்துவிட்டார்.

இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூலமாக எமது கட்சியின் தேசிய அமைப்பாளரும், தலைமைக்குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை வெற்றி வேட்பாளராக களமிறக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

19.01.2020 அன்று வவுனியாவில் இடம்பெற்ற தலைமைக்குழு கூட்டத்திலும், 20.01.2020 அன்று கூடிய யாழ்ப்பாணம் நிருவாகக் குழு கூட்டத்திலும் மேற்கண்டவாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒற்றை ஆசனத்தை நீண்ட கலந்துரையாடல்களின் பின் நீண்ட அரசியல் வரலாறு கொண்ட குடும்பத்தை சேர்ந்தவரும் சிறந்த கல்வியலாளருமான சுரேந்திரன் குருசுவாமிக்கு ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிருவாகத் திறனும், மும்மொழி தேர்ச்சியும் ஆளுமையும் மிக்க ஒருவரை எமது கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியும்.

அத்துடன் இவரின் வெற்றியின் மூலம் யாழ்.மாவட்டத்தில் எமது கட்சி இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற முடியுமெனவும் உறுதியாக நம்புகின்றோம்.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எமது கட்சியின் செயற்பாட்டாளர்கள் தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட தமிழ் மக்கள் அனைவரும் எமது வெற்றி வேட்பாளருக்கு உங்களது முழுமையான ஆதரவினை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.