நந்திக்கடல் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்

daglas0
daglas0

நந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.

நேற்று முன்தினம் (24) அமைச்சரின் அலுவலகத்தில் வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் நந்திக்கடல் பிரதேசத்தில் பெருந் தொகையான கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடப்பதனாலும், சுனாமியின் போது கரையொதுங்கிய மணல் திட்டுக்களினால் நந்திக்கடலின் ஆழம் குறைந்துள்ளமையினாலும் நன்னீர் மீன்பிடி பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர்,

நந்திக்கடல் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான மதிப்பீடுகள் மற்றும் சட்டநடைமுறை தொடர்பான அனுமதிகளை உடனடியாக பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சரினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது வெளியிடப்பட்ட இயற்கை வளப் பாதுகாப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் சில நந்திக்கடல்–சுண்டிக்குளம்–நாயாறு – விடத்தல்தீவு போன்ற பிரதேசங்களில் நன்னீர் மீன்வளர்ப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடையூறாக இருக்கின்றன.

தற்போது இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 18 வீதமாக இருக்கின்ற நன்னீர் மீன்பிடியை 30 வீதமாக உயர்த்துவதற்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அமைச்சினால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் நன்னீர் மீன் உற்பத்தியில் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில் இயற்கை வளப் பாதுகாப்பு தொடர்பான குறித்த வர்த்தமானி அறிவித்தல்களினால் உருவாக்கப்பட்டுள்ள இடையூறுகளை சுமூகமாக தீர்த்து கொள்வது தொடர்பாகவும் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.