கல்முனையில் ஆசிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்த ஆராய்வு

ADB 1 1
ADB 1 1

கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயும் நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் நேற்று (30) கல்முனையில் நடைபெற்றது.

மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நகரத்திட்ட நிபுணத்துவ ஆலோசகர் எச்.கே.ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகளும், கல்முனை மாநகர சபையின் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கல்முனை மாநகர சபை உள்வாங்கப்பட்டு, சுமார் 2100 மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான அங்கீகாரம் கிடைத்திருந்தது.

இதன் பிரகாரம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், மீள்பரிசீலனை செய்யப்பட்டு, அவற்றுக்கான உத்தேச மதிப்பீடு மற்றும் வரைபடங்களை தயாரிப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் குறித்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நகரத்திட்டமிடல் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர்கள் விஜயங்களை மேற்கொண்டனர்.