யாழ் .பல்கலை பகிடிவதை – வைத்தியசாலை பணிப்பாளர் கவலை

90 2
90 2

பகிடிவதை என்ற போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் முற்றாகக் நீக்கப்படல் வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயரில் இடம்பெற்ற கைபேசி மூல பாலியல் சேட்டை நாடளாவிய ரீதியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகிடிவதை தொடர்பில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற மிக மோசனமான பகிடி வதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியதோடு மிகுந்த கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாம் அனைத்து விதமான வன்முறைகளுக்கும் எதிரானவர்கள். வன்முறைச் செயற்பாடுகள் சமூகத்திலிருந்து முற்றாக நீக்கப்படல் வேண்டும்.

நீண்ட கால யுத்தம், அதன் காரணமாக ஏற்பட்ட உடல், உள ரீதியான வடுக்கள் என்பவற்றிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சி பெறாத ஒரு சமூகத்திற்குள் பகிடிவதை என்ற போர்வையில் இடம்பெறுகின்ற வக்கிர செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

எதிர்காலச் சமூகத்தில் பொறுப்புக்களை ஏற்கவுள்ள, சமூகத்தை வழிநடத்தவுள்ள படித்த இளம் சமூகத்திற்குள் காணப்படும் இவ்வாறான வன்முறை எண்ணங்கள் தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

இதற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு நாம் என்றும் எமது ஆதரவினை வழங்குவோம். பகிடிவதை என்ற பெயரில் குறிப்பாக மாணவிகள் மீது இடம்பெறுகின்ற உடல், உள ரீதியான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம்.

பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத்தின் முன்மாதிரிகளாக, சமூகத்தை வழிநடத்துகின்றவர்களாக இருக்க வேண்டும். வன்முறை கலாசாரங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆபத்தானது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பல கனவுகளுடன் உயர் கல்விக்காக பல்கலைகழகம் அனுப்புகின்றனர். பகிடி வதையில் ஈடுப்படுகின்ற மாணவர்களைக் கூட பல்கலைகழகத்தில் படிப்பிப்பதற்கு பல பெற்றோர்கள் படும் துன்பங்களை நாமறிவோம்.

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக்களை வழங்கி கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த இடத்தில் கேட்டுக்கொள்வதோடு, பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்களும், அவர்கள் வாழ்கின்ற சமூகங்களும் பொறுப்புக் கூறுபவர்களாகவும் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.