தமிழ் மக்கள் தேசிய கூட்டணி புரிந்துணர்வு உடன்படிக்கை!

IMG 5061 1
IMG 5061 1

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவதற்காக தற்போது விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கட்சியாகும். அக்கட்சி 2001ம் ஆண்டு வேறு கட்சிகளுடன் சேர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்க உதவியது. பின்னர் கொள்கை முரண்பாடு காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி தற்போது தனியாக செயற்பட்டு வருகின்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO)) மூத்த உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுமான சட்டத்தரணி திரு.ஸ்ரீகாந்தா மற்றும் திரு.சிவாஜிலிங்கம் ஆகியோர் கொள்கை முரண்பாடு காரணமாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து பிரிந்து தமிழ் தேசியக்கட்சியை உருவாக்கியுள்ளார்கள். இக்கட்சி இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது.

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான திருமதி.அனந்தி சசிதரன் தமிழரசு கட்சியில் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக விலகி ஈழ தமிழர் சுயாட்சி கழகம் என்ற கட்சியை உருவாக்கியுள்ளார். இக்கட்சியும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.

மேற்கூறப்பட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் சிலர் 2019 ஆம் ஆண்டு வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் 13 அம்ச கோரிக்கைகளை உருவாக்க உதவி செய்தனர். கொள்கை அளவிலும் செயற்பாட்டிலும் அவர்கள் அக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

அதேவேளை, இந்த 4 கட்சிகளையுஞ் சேர்ந்தவர்கள் கடந்த காலத்தில் கொள்கை ரீதியாக பல்வேறு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இவற்றின் பின்னணியில், இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் மிக விரைவில் நடத்தப்படவிருக்கின்ற நிலையில் மேற்குறிப்பிட்ட 4 கட்சிகளும் கொள்கை அடிப்படையில் கூட்டணி ஒன்றை அமைத்து செயற்படுவதற்கு இணங்கியுள்ளன.

இவற்றுள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தவிர ஏனையவை இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தினால் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்பதால் மேற்குறிப்பிட்ட கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக்கழகம் ஆகியன ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பதிவைத் தற்காலிகமாக மாற்றி புதிய கூட்டணி ஒன்றின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்வந்துள்ளன. இங்கு குறிப்பிடப்படும் பதிவு செய்யப்படாத கட்சிகள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் தேவை ஏற்பட்டால் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை எத்தருணத்திலேனும் புதிதாகத் தயாரித்து கைச்சாத்திடப்படும்.

1. இணக்கம்

புதிய கூட்டணி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்று அழைக்கப்படும்.

தனது கட்சியின் பதிவின் நலன்களை புதிய கூட்டணியான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (TMTK) சார்பில் பாவிப்பதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இணங்கியுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட அங்கத்துவக் கட்சிகளின் இடையே கொள்கை அடிப்படையில் பின்வரும் விதிகளுக்கு அமைய இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகின்றது –

இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கம் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும் மேற்குறிப்பிட்ட 4 கட்சிகளுடன் ஏனைய கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்வாங்கப்படலாம். இதேவேளை, இந்த கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகள் பொதுமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளை தமது கட்சிகளுக்கு ஊடாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்குள் உள்வாங்கி கூட்டுக் கட்சிகளின் சம்மதத்துடன் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தலாம்.

இந்த கூட்டணியின் தலைவராக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் செயற்படுவார். செயலாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவர் செயற்படுவார்.

2. நோக்கம்

சட்டப்படி தமிழ் மக்கள் ஒரு தேசம் (Nation), இலங்கையின் வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம் (Traditional Homeland), அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் (Right of Self Determination) என்று தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வழங்கிய ஆணையை ஏற்று மற்றும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு அமைவாக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி இறுதியாக 2012ல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் 2013ல் வடக்கு மாகாண சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் மீண்டும் வழங்கிய ஆணை ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைத் தீவினுள் தமிழர்களின் மரபுவழி தாயகமான இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையுடனான உயர்ந்த மட்ட சுயாட்சியை சமஷ்டி அடிப்படையில் பெறுவதற்கும் அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டுக்குமாக அனைத்து ஜனநாயக வழிகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்துவதற்கான பலமான கூட்டணியை உருவாக்குதல்.

3. பெயர்

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அங்கத்துவக் கட்சிகள் சேர்ந்து இந்தக் கூட்டணியை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில் இயக்க வேண்டும் என்றும் (இதன் பின்னர் இக் கூட்டணி தேசியக் கூட்டணி என்று அழைக்கப்படும்), அதன் சின்னம், கொடி, கூட்டணிப்பாடல் போன்றவற்றை அங்கத்துவக் கட்சிகள் விரைவில் தீர்மானிக்க வேண்டும் என்றும் இத்தால் இணங்குகின்றனர்.

4. செயற்பாடுகள்

அங்கத்துவக் கட்சிகளின் மேற்குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்காக கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள், முன் கோபதாபங்கள், குரோதங்கள், விரோதங்கள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு அகத்திலும் புலத்திலும் உள்ள அனைவரையும் அரவணைத்து அரசியல், ஜனநாயக மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

அங்கத்துவக் கட்சிகளின் மேற்குறிப்பிட்டுள்ள தீர்வுக் கோரிக்கையை அக்கறையுடனும் இதய சுத்தியுடனும் பரிசீலிக்கும் எந்த அரசுடனும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு தீர்வை அடையப் பாடுபடுதல்.

அரசாங்கத்துடன் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் பொருட்டு உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்தின் ஊடாகவும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு குறுக்கு வழிகளை கையாளாமல், போர்க் குற்ற விசாரணைகள் மூலம் இன அழிப்பு உண்மைகளை எமது சிங்களச் சகோதரர்களுக்குத் தெரியப்படுத்தி பரஸ்பர அவநம்பிக்கைகள் மற்றும் அச்சங்களை நீக்கி நிலையான சமாதானம் ஏற்பட சகல ஜனநாயக வழிகளையும் பயன்படுத்துதல். இதற்காக சிங்கள புத்திஜீவிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூக மற்றும் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களுடன் நெருக்கமாகச் செயற்படுதல்.

நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக அகத்திலும் புலத்திலும் உள்ள புத்திஜீவிகளை உள்வாங்கி மூலோபாய கொள்கைவகுக்கும் கட்டமைப்பு (Think Tank) ஒன்றை உருவாக்குதல். இந்தக் கட்டமைப்பு தேசியக் கூட்டணியின் கொள்கை வகுத்தல் மற்றும் அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனைகளை மற்றும் பரிந்துரைகளை வழங்கும். இந்த கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுபவர்கள் எவ்வகையிலும் கட்சி அரசியலுக்குள் தலையிட முடியாதவர்களாகவும் எந்தகட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களாகவும் இருப்பர்.

அரசியலையும் அபிவிருத்தியையும் சம அளவில் சமாந்திரமாக கொண்டு செல்லும் நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை தமிழர்களின் தொன்மையான வரலாறு, தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் பண்பாட்டுச் செழுமை ஆகியவற்றைப் பாதுகாத்து மேலும் மேன்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல்.

புலம்பெயர் மக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உலகநாடுகளின் உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுயசார்பு பொருளாதார செயற்றிட்டங்களை ஏற்படுத்தி மீண்டும் அவர்களுக்கு வளமான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்த பொருத்தமான ஒரு பொறிமுறையை அல்லது வழியை ஏற்படுத்துதல்.

சிறையில் வாடும் தமிழ் அரசியல்க் கைதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர், முன்னாள் போராளிகள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள், ஆதரவற்ற குடும்பங்கள் ஆகியோரின் பிரச்சினைகள் தொடர்பிலும் மற்றும் நில ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றம், பௌத்த மத சின்னங்களைத் திணித்தல், பிறழ்வான வரலாறுகளைத் திணித்தல் ஆகியவை தொடர்பிலும் சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் உதவிகளுடனும் அரசாங்கத்துடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலமும் தீர்வுகாணும் நடவடிக்கைகளை எடுத்தல்.

இறுதியுத்தத்தில் நடைபெற்றது இன அழிப்புத் தான் என்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலுப்படுத்த மேலும் ஆய்வுகளைச் செய்தும் தரவுகளைத் திரட்டியும் சர்வதேச ரீதியாக அதனை ஏற்றுக்கொள்ளச்செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

உலகம் முழுவதிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி எம் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலமான ஒரு ஆதரவு சக்தியை உருவாக்குதல்.

5. கட்சிகளின் கடப்பாடுகள்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயற்பாடுகளுக்கு அங்கத்துவக் கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தும், கூட்டாகவும் பொறுப்பாக இருப்பன.

தமக்கிடையில் எழும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வுகாணப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

தேசியக் கூட்டணி தொடர்பாக அல்லது முக்கிய விடயங்கள், தீர்மானங்கள் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் தன்னிச்சையாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க முடியாது. தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அல்லது தலைவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும். எவரேனும் ஒரு கட்சி அங்கத்தவர் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிடும் போது அது சொந்தக் கருத்தென்றும் கூட்டுக் கட்சியான தேசியக் கூட்டணியின் கருத்து அங்கீகரிக்கப்பட்ட உரிய நபரால் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறலாம். ஆனால் அக்கருத்துக்கள் தேசியக் கூட்டணியின் ஒருமைப்பாட்டையோ ஒத்தகருத்துக்களையோ பாதிப்பதாயின் அவர் மேல் தேசியக் கூட்டணி உரிய நடவடிக்கை எடுக்கும்.

கட்சிகள் ஒவ்வொன்றும் தத்தமது வேட்பாளர்கள் சம்பந்தமான செலவுகளைப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். சேர்ந்து நடாத்தப்படும் அரசியல் கூட்டங்களுக்கான செலவுகளை யாப்பு ஒன்று உருவாகும் வரையில் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களே வரையறுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அங்கத்துவக் கட்சிகளின் உத்தியோகபூர்வ கணக்காளர்கள் இவை பற்றி ஆராய்ந்து கட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள்.

6. நிர்வாகச் செயன்முறை

தேசியக் கூட்டணியின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளை நெறிப்படுத்தும் வகையில் யாப்பு ஒன்று உருவாக்கப்படும். அது அநேகமாக விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னரே சாத்தியமாகும் என்பது ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதுவரையில் தேசியக் கூட்டணியின் முகாமைத்துவஇ நிர்வாக செயற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அரசியல் பீடம் (உபபிரிவு 6.4ஐப் பார்க்கவும்) முடிவெடுக்கும்.

தேசியக் கூட்டணியின் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதற்காக ஒழுக்கக் கோவையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டும். அதுவரையில் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களே ஒழுக்கத்தை வரையறுத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமது தனித்துவத்தைப் பேணுவது அங்கத்துவக் கட்சி உறுப்பினர்களின் சுதந்திரம் என்றாலும், கூட்டு முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு செயற்படவேண்டும்.

தேர்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் இந்த தேசியக் கூட்டணியால் உருவாக்கப்படும் 11 அங்கத்தவர்களைக் கொண்ட அரசியல் பீடம் (Politbureau) தீர்மானிக்கும். தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் தலைவருக்கு மேலதிகமாக தமிழ் மக்கள் கூட்டணி 50% மற்றையவை அனைத்தும் 50% என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் அரசியல் பீடத்தின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தேசியக் கூட்டணியின் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் வேறு கட்சிகளை உள்வாங்க தேசியக் கூட்டணி முடிவெடுத்தால் மேற்கண்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மாற்றம் செய்யப்பட்டு பங்காளி கட்சிகளுக்கு இடையே பகிரப்படலாம் அல்லது விட்டுக்கொடுப்பு செய்யப்படலாம்.

சகல முடிவுகளும் ஏகமனதாக அல்லது பெரும்பான்மை முடிவுகளுக்கு அமைய மேற்கொள்ளப்படும். அரசியல்பீட அங்கத்தவர்கள் ஏதேனும் விடயத்தில் சமமாகப் பிரிந்திருந்தால் அரசியல்பீட தலைவர் தமது தீர்மானிக்கும் வாக்கை (Casting Vote) பாவிப்பார்.

தேசியக் கூட்டணியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மூலோபாய கொள்கை வகுக்குங் கட்டமைப்பையும் மற்றும் விசேஷ தேவைகளுக்காக உப குழுக்களையும் அரசியல் பீடம் உருவாக்கலாம். முக்கியமாக கலை பண்பாட்டுக்கான உப குழு, பால் சமத்துவத்துக்கான உப குழு, சமூக சமத்துவத்துக்கான உப குழு போன்றன தேசியக் கட்டமைப்புகளுக்கான உப குழுக்களுள் அடங்குவன. இவற்றுடன் சிறுவர் முதியோர் நலச்சேவைஇ முன்னாள் போராளிகளுக்கான நலச்சேவை, மாற்றுத் திறனாளிகளுக்கான நலச்சேவை போன்ற நலச் சேவைகளுக்கான உபகுழுக்கள் போன்றனவும் உருவாக்கப்படலாம். உப குழுக்களில் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். அரசியல் பீடத்தின் வழிநடத்தலின் கீழ் இவ்வுபகுழுக்கள் இயங்குவன.

தேசியக் கூட்டணியின் அரசியல் பீடம் குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை கூடி நடைமுறை விடயங்களை ஆராயும்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மூலோபாய கொள்கைவகுக்கும் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும் வரை தற்காலிகமாக மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், படைப்பாளிகள் அடங்கிய ஓர் ஆலோசகர் குழு அரசியல் பீடத்தினால் உருவாக்கப்படும்.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை அரசியல் பீடமே கையாளும். இதன் போது கொள்கைவகுக்கும் கட்டமைப்புஃ ஆலோசனை சபையின் பரிந்துரைகளையும் கவனத்தில் எடுத்து தேர்தல் விஞ்ஞாபனம்இ தேர்தல் உபாயம் மற்றும் வேட்பாளர் நியமனம் ஆகியவை தொடர்பிலான முடிவுகளை அரசியல் பீடம் மேற்கொள்ளும்.

அரசியல் பீடத்தில் கட்சிகளுக்கு பிரிவு 6.4 இல் வழங்கப்பட்டுள்ள விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்குமான வேட்பாளர்கள் நியமனம் அமையும். இதன்படி, யாழ் – கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியகட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் 5:2:2:1 என்ற எண்ணிக்கையில் போட்டியிடுவர். தமிழ் மக்கள் கூட்டணி நலஉரித்துக்கள் சார்ந்த இரு வேட்பாளர்களைத் தமக்கென ஒதுக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கலாம். எனினும் மற்றைய தேர்தல் மாவட்டங்களில் நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் இயற்றப்படலாம். தேர்தல் தேவைகளிற்கேற்ப அங்கத்துவக் கட்சிகள் தமது எண்ணிக்கையில் மாற்றஞ் செய்யலாம்.

தேசியக் கூட்டணியின் தலைவரே பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் செயற்படுவார். தேசியக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற குழுவின் தலைவராக செயற்பட முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் பாராளுமன்ற குழுவின் தலைவர் பதவி அரசியல் பீடத்தினால் தீர்மானிக்கப்படும்.

தேசியபட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் பொருத்தமானவர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசியல்பீடம் கொண்டிருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேசியபட்டியல் ஊடாக நியமனம் பெறுபவர் எத்தனை ஆண்டுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கலாம் என்பதையும் அரசியல் பீடம் தீர்மானிக்கும். இது தொடர்பிலான முடிவு ஒருவரின் நியமனம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட வேண்டும்.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்படும் கூட்டணியின் பெயர், சின்னம், அரசியல் பீட உறுப்பினர்களின் பெயர் விபரங்கள், மற்றும் தேவையான விபரங்கள் ஆகியவை உள்ளிட்ட பதிவு ஒன்று அனைத்து பங்காளிக் கட்சிகளின் செயலாளர்களின் ஒப்பங்களுடனும் தேர்தல் திணைக்களத்தில் மேற்கொள்ளப்படும்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அங்கத்தவர்கள் அந்தந்தக் கட்சிகளின் ஒப்புதலின்றி கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது வேறு ஏதும் கட்சிகளுடனோ இணைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அங்கத்துவ கட்சிகள் அவர்களை ஏற்கவுங் கூடாது. அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் அந்தந்தக்கட்சியின் அல்லது அமைப்பின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பதுடன் தேசியக் கூட்டணியின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டுச் செயற்படவேண்டும்.

தேர்தல் சம்பந்தமான தேசியக் கூட்டணியின் தீர்மானங்கள் அனைத்தும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் அல்லது அவர் சார்பில் தேர்தல் திணைக்களத்துடன் தொடர்பு கொள்பவரால் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். தேசியக் கூட்டணி தேர்ந்தெடுக்கும் நபர்களின் பெயர்களே முறையாக தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட வேண்டும்.

தனது கட்சியின் பதிவின் நலன்களை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவடையும் வரை புதிய கூட்டணியான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு நல்கும். அதன்பின்னர் குறித்த பதிவை நான்கு கட்சிகள் சேர்ந்த புதிய கூட்டணிக்கு வழங்கி தமது கட்சியின் பெயரை வேறு பெயராக மாற்ற வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பதிவின் போது அப்பெயரை பதிவு செய்வதற்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது.

7. பொதுவானதும் முக்கியமானதும்

தமிழ் அரசியலை உயர்ந்த ஒரு நிலையை நோக்கி கொண்டு செல்வதற்காக தேசிய கூட்டணியின் கீழ் எந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் தமது சொத்துக்கள் மற்றும் வருமானங்களை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக வெளிப்படுத்துவது ஊக்குவிக்கப்படுகின்றது. வேட்பாளர் தெரிவு, பொறுப்புக்கள் மற்றும் பதவிகள் நியமனம் ஆகியவற்றின்போது இந்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இந்தத் தேசியக் கூட்டணி ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் வேட்பாளர்கள் தமது மாதாந்த படிகளின் 8 சதவீதத்தினை பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும். இது பற்றிய அறிவித்தல், விபரங்களுடன் தேசியக் கூட்டணிக்கு வழங்கப்பட வேண்டும். அது தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம். அதேவேளை, ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினை தேசிய கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காக வழங்கவேண்டும்.

இளையோர்களையும் புதியவர்களையும் அரசியலுக்குள் உள்வாங்கும் பொருட்டு ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆகக்குறைந்தது 10 வீதம் அவர்களுக்காக இடம் ஒதுக்கப்படவேண்டும். இதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு தேசியக் கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் வகையில் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களை முடிந்தளவு நிறுத்துவதற்கு அங்கத்துவ கட்சிகள் பிரயத்தனம் செய்யவேண்டும். தேசியக் கூட்டணியின் ஆண்: பெண் பிரதிநிதித்துவம் 50:50 என்ற விகிதாசாரத்தில் நாளடைவில் ஏற்படும் வகையில் அங்கத்துவக் கட்சிகள் முயற்சி எடுக்கவேண்டும்.

இந்த தேசியக் கூட்டணியின் கீழ் பாராளுமன்றத்துக்கு அல்லது ஏனைய பொறுப்பான பதவிகளுக்கு தெரிவுசெய்யப்படும் ஒருவர் மீது ஆதாரபூர்வமாக நம்பகத்தன்மையான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் முறையான விசாரணை நடைபெறும் வரை அவர் தனக்கு வழங்கப்பட்ட நியமன ரீதியான பதவியில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளவேண்டும். இதற்கான ஆவணங்களில் கையொப்பம் இட்ட பின்னரே அவர் தமது பதவியை ஏற்றுக்கொள்ளலாம்.

தேர்தல்களில் வெற்றிபெறுபவர்கள் தமது அதிகாரத்தை தமது சொந்த பந்தங்களுக்காக துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. திறமை, தகுதி மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வேலைவாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்.

தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் அதன் அங்கத்தவர்களும் இந்தக் புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ள நிபந்தனைகளுக்கு அல்லது ஏற்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவோ அல்லது இந்தக் தேசியக் கூட்டணியை வலுவற்றதாக்கவோ கூட்டுக் கட்சிகளுக்கு அதிகாரம் உண்டு.

மேற்குறிப்பிட்ட ஏற்பாடுகளை ஏற்று தரப்பார் சார்பில் 2020 பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி ஆகிய இன்றைய தினத்தில் பின் குறிப்பிடப்பட்டவர்களால் கையெழுத்திடப்படுகிறது.

……………………………….. …………………………
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் திகதி
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி

……………………………….. ……………………………….
திரு.க.பிரேமச்சந்திரன் செயலாளர்
தலைவர் ஈழ மக்கள் புரட்சிகர
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
விடுதலை முன்னணி

……………………………….. ………………………………..
திரு.என்.சிறிகாந்தா செயலாளர்
தலைவர் தமிழ் தேசிய கட்சி
தமிழ் தேசிய கட்சி

………………………………..
திருமதி.அனந்தி சசிதரன்
செயலாளர் நாயகம்
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்