தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்திய வட மாகாணத்தின் 4 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்.தென்மராட்சி மீசாலையில் அமைந்துள்ள பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று(10) இடம்பெற்றது.
இளங்கலைமாணி தமிழியல் சிறப்பு பட்டம் பெற்ற 29 மாணவர்களுக்கு பட்டங்களை யாழ்.பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வழங்கிவைத்தார்.
மேலும், தமிழியல் மேற்பட்ட கற்கையை மேற்கொண்ட 35 மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பட்டய கற்கையை மேற்கொண்ட 47 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இளங்கலைமாணி தமிழியல் சிறப்பு தேர்வில் முதல் நிலையுடன் சிறப்பு தேர்ச்சி பெற்ற மூவருக்கு “இராஜராஜ சோழன் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதி எஸ்.ஆர்.சத்தியேந்திரம்பிள்ளை, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வடக்கு மற்றும் மத்திய மாகாண இயக்குநர் இ.கோபிகிருஷ்ணா, பாரதி நிறுவன இயக்குநரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வட மாகாண இணைப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான க.ரஜனிகாந்தன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.