மாணவரின் வீட்டில் நாமே தாக்கினோம் உரிமைகோரியது ஆவா குழு!

1 hom
1 hom

பகிடிவதை காரணமாக அண்மையில் பல்கலைக்கழக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது.

யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி வீதியிலுள்ள வீட்டில் முகங்களை மூடிக்கொண்டு சென்ற அடையாளம் தெரியாதோரால் நேற்றிரவு 10 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டுக்கு அருகிலுள்ள சி.சி.டி.வி. காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல்களில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் தமது முகநூல்களில் “தமிழர்கள் அடையாளமாக காணப்படும் யாழ்பாண பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வகையிலேயே சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெண்களுக்கு எதிராக பகிடிவதை மேற்கொள்ளும் நபர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றது என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிடிவதை என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பச்சத்தில் இது போன்ற தண்டனை இனிவரும் காலங்களில் தொடரும் என பதிவிட்டுள்ளனர்.