யாழ். பல்கலையில் மீண்டும் பகிடிவதை

1 da
1 da

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைக்கு உள்ளான மாணவன் கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் காப்பாற்றப்பட்டான்.

இந்நிலையில் பகிடிவதையில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரி, மாணவனால் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து அவர் பதவி விலகல் கடிதத்தை யாழ். பல்கலையின் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் கையளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை பகிடிவதைக்கு உள்ளான புதுமுக மாணவன் தான் உயிரிழக்கப் போவதாக சக மாணவர்களிடம் நேற்றுமுன்தினம் கூறியதை அடுத்து சக மாணவர்கள், இந்த விடயத்தினை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் விசாரணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டார். விசாரணையின் போது, அதிகாரியை மிரட்டும் வகையில் குறித்த மாணவன் நடந்து கொண்டுள்ளார்.

இதன் காரணமாக ,குறித்த அதிகாரி தனது பதவி விலகல் கடிதத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு நேற்றுமுன்தினம் மாலையே கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்றையதினம் ,குறித்த மாணவனை அழைத்த, தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவர் மாணவனை மன்னிப்புகோருமாறு பணித்துள்ளார். இந்நிலையில் மாணவன் மன்னிப்புக் கோரியதையடுத்து, தனது பதவி விலகல் கடிதத்தை மீளப் பெற்றுள்ளார் அந்த அதிகாரி.

மேலும் குறித்த மாணவனுக்கு எந்தவொரு தண்டனையும் விதிக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பாலியல் பகிடிவதை விவகாரம் அடங்கும் முன்னரே மற்றொரு மாணவன் பகிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.