மத்திய அதிவேகப் பாதைகளை துரிதமாக நிர்மாணிக்க பணிப்பு!

4b print
4b print

மத்திய அதிவேகப்பாதை மற்றும் ஏனைய அதிவேகப் பாதைகளை மிக அவசரமாக நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ள மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையிலான அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து திறந்து வைக்கப்படுதல் வேண்டும். 

மத்திய அதிவேகப் பாதையில் கடவத்தையில் இருந்து மீரிகம ஊடாக குருணாகல் வரை, குருணாகல் தொடக்கம் தம்புள்ள வரை, பொதுஹெர முதல் கலகெதர வரையிலான பகுதிகளை உடனடியாக நிறைவு செய்ய வேண்டியது பிரிதொரு செயற்திட்டமாகும்.

வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன்  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கடவத்தை தொடக்கம் தம்புள்ளை வரையிலான அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்ததன் பின்னர் வாகனங்களுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கு மிக விரைவாக பிரவேசிக்கக்கூடியதாக இருக்கும்.

 மக்களுக்கு மிகவும் இலகுவாக பயணங்களை மேற்கொள்வதற்கு வழி செய்வதே இதன் நோக்கமாகும்.

 வீதி முறைமைகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்ட பொருளாதார வழியொன்றும் இதன்மூலம் உருவாகும்.

இங்கிரிய முதல் இரத்தினபுரி வரையிலான 76 கிலோமீற்றர் வீதி நிர்மாணப் பணிகளை விரைவாக மேற்கொண்டு தேசிய அதிவேக வீதி முறைமையுடன் இணைக்கப்படவுள்ளது. 

இது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவையில் ஆரம்பமாகும். 

கண்டி சுரங்கப் பாதை நிர்மாணப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதும் அதிக வீதி நெரிசலுக்கு தீர்வாக அமையும்.தற்போது பகுதியளவு நிறைவு செய்யப்பட்டுள்ள வீதி மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டுமென்றும் கிராமிய வீதி முறைமையை ஏனைய வீதி முறைமைகளுடன் இணைந்ததாக நவீனமயப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

காலி வீதி மற்றும் கடுவலை, ஹைலெவல் மற்றும் பிலியந்தலை வீதிகளில் கொழும்பு நோக்கி காலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் வாகன நெரிசல்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினையும் விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.அதிக நெரிசலைக் கொண்டுள்ள இடங்களை இனங்கண்டு மேம்பாலங்களும் சுரங்கப் பாதைகளும் நிர்மாணிக்கப்படவுள்ளது.