விராட் கோஹ்லியின் சுதந்திரத்தை அவரிடமே விட்டு விடுங்கள் – விஜய் மல்லையா

1 vijay
1 vijay

பெங்ளூர் அணியை வழிநடத்துவதில் விராட் கோஹ்லியின் சுதந்திரத்தை அவரிடமே விட்டு விடுங்கள் என பெங்ளூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்ளூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு தடவைகூட கோப்பையை வெற்றிகொள்ளவில்லை.

கடந்த மூன்று சீசனில் மிகவும் மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த 13ஆவது ஐ.பி.எல். தொடரிலாவது வாகை சூடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த அணிக்குரிய இலட்சினை புதிதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றம் அணிக்கு ராசியாக அமையும் என அணி நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பெங்ளூர் அணியின் முன்னாள் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ‘புதிய இலட்சினை, சிங்கம் கர்ஜிப்பது போல் அருமையாக உள்ளது. ஆனால் கோப்பையை வென்று பெங்ளூருக்கு கொண்டு வாருங்கள்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இருந்து பெங்ளூர் ரோயல் செலஞ்சர்சுக்கு வந்தவர், விராட் கோஹ்லி. அவர் இந்திய அணியின் வெற்றிகரமான தலைவனாகவும் அபாரமான திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். அணியை வழிநடத்துவதில் அவருக்கான சுதந்திரத்தை கொடுத்து அவரிடம் விட்டு விடுங்கள். எல்லா பெங்ளூர் ரோயல் செலஞ்சர்ஸ் ரசிகர்களும் ஐ.பி.எல். கோப்பைக்காக நீண்ட காலம் காத்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.