நாட்டு மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றிவிட்டார்

2 2
2 2

“ஜனாதிபதித் தேர்தலில் நம்பி வாக்களித்த நாட்டு மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றி வருகின்றார்.”

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய பாதுகாப்பைப் பெரிதும் வலியுறுத்திய ஜனாதிபதி தற்போது பாதுகாப்பு அமைச்சர் ஒருவரைக்கூட நியமிக்க முடியாதுள்ளார். இவ்வாறான நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும்?

ஜானதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது முதல் தற்போது வரை மக்களின் வாழ்வாதாரபிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. மக்களுக்கு மேலதிக நெருக்கடி நிலைமையே உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கடன் தொகையைச் செலுத்த முடியாமல் மேலதிக கால அவகாசம் கேட்கும் ஒரு நிலைமைக்கு இந்த அரசு நாட்டைக் கொண்டு வந்துள்ளது. வரிச் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் அதன் பலன்களைப் பெற்றுக்கொள்ளவில்லை.

ஜனாதிபதி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டதே தவிர சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்த அரசு இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.

அரிசி மற்றும் மரக்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் வாழ்க்கைச் செலவீனத்தை ஏற்று நடத்த முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் முதலாம் திகதி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக இந்த அரசு அறிவித்துள்ள போதும் அதற்கான எவ்வித நடவடிக்கையும் தற்போது மேற்கொண்டு வருவதாகத் தெரியவில்லை.

பட்டதாரிகளுக்கான அரச தொழிலுக்கு வயது வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 2012ம் ஆண்டில் பட்டதாரியானவருக்குத் தற்போது வயது 45 ஐத் தாண்டியிருக்கும்.

இவர்கள் அரச தொழிலை நம்புவது சாத்தியமானதல்ல. பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் வெளியேறும்போதே வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்” – என்றார்.