எமக்கு தனிநாடு வேண்டாம் – பிரித்தானியாவிடம் கூறிய சம்பந்தன்

06
06

இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மல்க்கம் ப்ருஸ்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இரா சம்பந்தன், சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இடம்பெறும் வரையில் தமிழ் மக்கள் தனி நாடு கோரிக்கையை முன்வைக்கவில்லை என தெரிவித்த இரா சம்பந்தன், எவ்வாறெனினும் அரசியலமைப்பின் 13வது திருத்தசட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தனி நாட்டு கொள்கையை தமிழ் மக்கள் கைவிட்டனர் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

13வது திருத்தச்சட்டம் ஒரு முன்னேற்றகரமான ஒரு படியாக இருந்தாலும் ஆக்கபூர்வமான அதிகாரபரவலாக்கத்திற்கு அது போதுமானதாக இருக்கவில்லை, இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் 13வைத்து திருத்த சட்டத்தையும் தாண்டிய ஒரு அதிகாரபரவலாக்கத்திற்கு அடிகோலும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.

பல வரைபுகள் முன்வைக்கப்பட்டாலும் இன்று வரை ஒரு தீர்வினை நாம் கண்டுகொள்ளவில்லை எனவும் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், பேரினவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமேயானால் அதிகார பரவலாக்கம் மாத்திரமே ஒரே வழி என தெரிவித்தார்.

அதிகார பரவலாக்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி ஏனைய பிரச்சினைகளிற்கும் தீர்வுகளை காண வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் பதிலளித்த திரு சுமந்திரன் அவர்கள் இந்த அரசாங்கமும் ஒரு புதிய அரசியல் யாப்பு வேண்டும் என தெரிவித்துள்ளது எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றினை கண்டுகொள்ளும் வகையில் அந்த புதிய யாப்பு அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஒன்றுபட்ட பிரிவுபடாத நாடொன்றினுள் அதிகாரபரவலாக்கத்திற்கு வாக்களித்து வந்துள்ளார்கள் அவர்களது அந்த ஜனநாயக கோரிக்கையை ஆட்சியாளர்கள் மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சியின்மை, வறுமை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிரச்சினைகள் மற்றும் வேலையின்மை போன்ற ஏனைய அன்றாட பிரச்சினைகளிற்கும் தமிழ் மக்கள் முகங்கொடுத்து வருகிறார்கள் என தெரிவித்த திரு சுமந்திரன் நாட்டில் நிலவுகின்ற ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் முன்வருவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினை அடையும் பட்சத்தில் நாம் பல முதலீட்டாளர்களை விசேடமாக புலம்பெயர் மக்களை முதலீடு செய்யும்படிக்கு எம்மால் கவர்ந்து கோலா முடியும் என்பதனையும் வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம் ஆனால் பெரும்பான்மை மக்கள் சரியா திசையிலே வழிநடத்தப்பட்ட வேண்டும் என தெரிவித்த சுமந்திரன் அதிகாரபரவலாக்கத்திற்கான கோரிக்கைகைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதன் விளைவாகவே பிரிவினைவாதம் உருவானது என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே நிரந்தரமான தீர்வொன்றினை கண்டுகொள்ளும் வகையிலும் கடந்த கால சம்பவங்கள் மீள் நிகழாத முறையிலும் முன்னேறி செல்வதற்கு புத்தியோடு செயற்படவேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

வடக்கு கிழக்கு மாத்திரமல்ல முழு நாடும் செழிப்படைய வேண்டும் என்பதே எமது விருப்பம் என் தெரிவித்த இரா சம்பந்தன் அதிகாரபரவலாக்கமானது தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல மாறாக அது அனைத்து பிரதேசங்களிற்கும் அமுலாக்கப்படும் ஒன்று எனவும் தெரிவித்தார்.

மக்கள் தமது கருமங்களை செய்து கொள்ளும் வகையில் அதிகாரத்தினை அவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு தீர்வினையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

நாங்கள் தவறான ஒன்றையோ அல்லது அநீதியான ஒன்றையோ கோரவில்லை என தெரிவித்த இரா சம்பந்தன் எமது கோரிக்கையானது நியாயமானதும் உலகில் பல்வேறு நாடுகளில் பிரயோகத்தில் உள்ள ஒன்றும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிய இரா சம்பந்தன் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் ஒரு நியாயமான தீர்வினை தேசிய பிரச்சினைக்கு கண்டு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் இரா சம்பந்தனின் பங்களிப்பினை பாராட்டிய அதேவேளை நீங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு மிகவும் ஆக்கபூர்வமானது எனவும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நியாயமானது எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் உங்களது தெளிவான நியாயமான அமைதியான நடைமுறைகள் மெச்சத்தக்கது எனவும் தொடர்ந்தும் ஒரு நியாயமான தீர்வினை அடையும் நோக்கில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரித்தானியா தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.