எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91 ஆவது வயதில் கெய்ரோவிலுள்ள வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 850 பேரை, தனது பாதுகாப்பு படைகளை கொண்டு படுகொலைசெய்த குற்றத்திற்காக, ஹொஸ்னி முபாரக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பின்னர் கைதுசெய்யப்பட்டு இராணுவ தடுப்பில் வைக்கப்பட்டார்.
ஹொஸ்னி முபாரக் சுமார் 30 வருடகாலம் எகிப்தை ஆட்சி செய்த நிலையில் அரபு வசந்த புரட்சியின் மூலம் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதோடு, படுகொலைகள் மற்றும் ஊழல் குற்றத்திற்காக ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்மார் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன்பின்னர் மகன்மார் இருவரும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்படவே, இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முபாரக், நோய்வாய் பட்டநிலையில் மேன்முறையீடு செய்திருந்தார்.
குறித்த மனுவை விசாரித்து கெய்ரோ இராணுவ நீதிமன்றம் ஹொஸ்னி முபாரக்கின் உடல்நிலையை கருத்திற்கொண்டு, அவரை 2017 ஆம் ஆண்டு விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.