இது பௌத்த சிங்கள நாடு – சஜித் பிரேமதாஸ

sajith
sajith

“இது எமது சொந்த நாடு. இது பௌத்த சிங்கள நாடு. இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் பௌத்த தர்மத்துக்கு இணங்க ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் கூறியதாவது:-

“சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டு எதிர்த்தரப்பினருடன் இணைந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்களித்த மக்களைக் காட்டிக்கொடுக்கமாட்டோம். இவ்வாறான வங்குரோத்து அரசியலை இல்லாதொழிக்கும் நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இந்தியாவுக்கான விஜயம் உலக நாடுகள் மத்தியில் எமது நாட்டின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள இழுக்காக அமைந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய என்னுடைய தலைமையில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு நாட்டு மக்களைப் பாதுகாக்கக்கூடிய கூட்டணியாகவே ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளோம். இந்தக் கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

பௌத்த மதத்தைப் பாதுகாப்பதுடன், ஏனைய இன மற்றும் மதத்தவர்களையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே எமது நோக்கமாகும். எனவே, எம்மிடம் ஆட்சி அதிகாரத்தைத் தருமாறு அனைத்து இன மக்களிடமும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.