“நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்கவே ஐக்கிய மக்கள் சக்தி விரும்புகின்றது. எம்முடன் கைகோர்க்குமாறு ரணிலுக்கு அழைப்பு விடுக்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் ரணிலுக்காக எந்த நேரத்திலும் திறந்திருக்கின்றன.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பிரசாரத் தலைமை அலுவலகம் இன்று பத்தரமுல்லை – எதுல் கோட்டையில் திறந்து வைக்கப்பட்டது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சியின் அனுமதியுடனேயே எமது புதிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே, இதனை முன்னோக்கிக் கொண்டு செல்லத் தேவையான பலம் எம்மிடத்தில் உள்ளது. இதை முறியடிக்க எவராலும் முடியாது. ஏனெனில் ஜனநாயக ரீதியான பயணத்திலேயே நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
அதேவேளை, ஏனைய இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளலாம். எதற்காகவும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எந்த வேளையிலும் அர்களைப் பாதுகாக்க நாம் தயாராகவுள்ளோம்.
ஊழல் – மோசடி, கப்பம் பெறுபவர்களின் வலைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். தாய்நாட்டை விற்கும் செயற்பாடுகளுக்குள் செல்ல வேண்டாம்” – என்றார்.