இரு வாரங்களுக்கு வடக்கு மக்களே மிக அவதானம்!

GettyImages 1 dd
GettyImages 1 dd

யாழ்ப்பாணத்தில் கொரேனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சுவிஸில் இருந்து இங்கு வந்து ஆராதனை நடத்திய மதபோதகருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், வடக்கு மாகாண மக்கள் அடுத்த இரு வாரங்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றுடன் சுவிஸிலிருந்து வந்த மத போதகர் ஆராதனைக் கூட்டம் நடத்தியுள்ளார். மத போதகர் சென்று வந்த இடங்கள், அவரைச் சந்தித்தவர்கள் என்று பல தரப்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. அதேபோன்று யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்ட பின்னர் யாரைச் சந்தித்தார், எங்கு சென்றார் என்ற விடயங்கள் ஆராயப்பட வேண்டும். அவர் ஊடாகவும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

தொற்று ஏற்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதற்கு சில நாட்கள் எடுக்கும். அதற்கிடையில் அவர்கள் ஊடாக ஏனையோருக்கும் பரவ வாய்ப்புண்டு. எனவே, வடக்கு மாகாண மக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்கவேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளனர்.