ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது பற்றி அமைச்சரவையில் பேச்சு

7 j
7 j

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க அமைச்சரவை இன்று புதன்கிழமை நீண்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

அதேவேளை, ஊரடங்குச் சட்ட நேரம் அமுலில் இருந்தாலும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும் அது பெருமளவில் கட்டுக்குள் வந்திருப்பது குறித்தும் ஜனாதிபதி அமைச்சர்களுக்கு விளக்கினார். இன்னும் சில வாரங்களில் இது முழு அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி இங்கு நம்பிக்கை வெளியிட்டார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு ஒரே நேரத்தில் மக்கள் அணி திரள்வதால் வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அமைச்சர்கள் இங்கு சுட்டிக்காட்டினார்.அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி சில மாவட்டங்களில் பகுதி பகுதியாக ஊரடங்கை அமுல்படுத்துவது பற்றி பாதுகாப்புத் தரப்புடன் பேசப்படுமென குறிப்பிட்டார்.

புத்தாண்டு வருவதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அதற்கு முன்னர் இதனைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு அதிகபட்ச முயற்சிகளை எடுப்பதாக இங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறினார்.

இந்த இக்கட்டான காலப்பகுதியில் மீனவர்கள் பிடிக்கும் மீன்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு 600 மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்தது. அதேசமயம் வடக்கு, கிழக்கில் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இங்கு வலியுறுத்தினார்.

நிவாரணப்பணிகளுக்காக இந்தியாவின் கடன் உதவியின் ஒரு பகுதியை பயன்படுத்தவும் அமைச்சரவை உத்தேசித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கும் விசேட கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்று அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இங்கு கோரினார். ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை கம்பனிகளிடம் கோரினாலும் அவை 900 ரூபா வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தொண்டமான் இங்கு குறிப்பிட்டார் .அந்த விடயம் குறித்து பேசி இறுதி முடிவை எடுக்க அமைச்சரவை தீர்மானித்தது. அத்துடன் தொழிலாளர்களுக்கு பண்டிகைக்கால முற்பணம் முற்கூட்டியே வழங்கப்பட கம்பனிகளை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.