திருநெல்வேலி சந்தை குழுக்களாக இயங்க முடிவு

3 ffd
3 ffd

நல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட்டு பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்க வைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது நல்லூர் எல்லைக்குள் இருக்கும் திருநெல்வேலி சந்தைக்கு மக்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இன்று பிரதேச சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதன் காரணமாக அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.யாழ்ப்பணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மக்கள் சந்தைகளில் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.இதற்கு என்ன செய்வது என இன்று நாம் கூடி ஆராய்ந்தோம்.

எமது பிரதேச சபையின் எல்லைக்குள் திருநெல்வேலி பொதுச் சந்தை உள்ளது.இனிவரும் காலங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சந்தையை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.சந்தைக்கு வரும் வீதிகளில் பல இடங்களிலில் சந்தை வியாபாரத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.மக்கள் சந்தைக்கு வரும் வீதிகளில் உள்ள வியாபாரிகளிடம் மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியும்.

மேலும் விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை தங்களின் இடங்களிலோ அவர்களது கிராமங்களிலோ விற்பனை செய்ய முடியும்.பொது மக்கள் திருநெல்வேலி சந்தைக்கு வரும் பாதைகளில் உள்ள மரக்கறி வியாபர நிலையங்களில் கொள்வனவு செய்து எமக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்.