சமுர்த்திக் கடன்: அம்பலத்துக்கு வந்த அரசாங்கத்தின் திருகுதாளம்

gota and mahinda
gota and mahinda

கொரோனா நிவாரணமாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கடன் மற்றும் உலர் உணவுப் பொருள் விநியோகத்தில் அரசு மேற்கொண்ட திருகுதாளம் அம்பலமாகியுள்ளது. சமுர்த்திப் பயனாளிகளுக்க வழங்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் 10 ஆயிரம் ரூபா கடன் தொகைக்குள்ளேயே அவர்களுக்கான உலர் உணவுப் பொதி விநியோகமும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிவாரணப் பொதியை அறிவித்திருந்தார். அதில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா இலகு கடனாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடன், சமுர்த்திப் பயனாளிகளின் கட்டாய சேமிப்பை பிணையாக வைத்தே வழங்கப்படவுள்ளது. அதிலும் 5 ஆயிரம் ரூபாவே முதல் கட்டமாக வழங்கப்படவுள்ளது. அந்தக் கடனுக்கு வட்டி அறவிடப்படமாட்டாது. 12 மாதங்களுக்குள் அதனைச் செலுத்த வேண்டும்.

இதேவேளை, சமுர்த்திப் பயனாளிகளுக்கு அங்கத்தவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆயிரத்து 500 ரூபா, 2 ஆயிரத்து 500 ரூபா, 3 ஆயிரத்து 500 ரூபா உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பொதிகள் இலவசமாக வழங்கப்படாது என்றும், 10 ஆயிரம் ரூபா இலகு கடனில் உலர் உணவுப் பொதிக்குரிய பெறுமதி கழிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிவாரணம் வழங்குவதாக கூறிக் கொண்டாலும் உண்மையில் சமுர்த்திப் பயனாளிகளின் பணத்தையே அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு ஏமாற்றியுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.