அமைப்புக்களின் ஒரு பகுதி நிதியை நிவாரணத்திற்காக உதவ முன்வரவேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

9 mpa
9 mpa

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பட்டினியை எதிர்நோக்கி இருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக ஆலயங்களும் ஏனைய பொது அமைப்புகளும் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் அதிகரித்துச் செல்வதால் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.

பெண்தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், அங்கவீனர்கள், தினசரி வருமானத்துக்காக வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் சொல்லொணா வறுமைத் துன்பத்தில் அகப்பட்டு தவிக்கின்றனர்.

இது மிக மோசமான நிலைக்கு சென்று பட்டினிச்சாவை எதிர்நோக்கும் நிலை ஏற்படப் போகிறது என்பது கண்கூடாகத் தெரிகின்றது.

இந்நிலையில் இதுவரை உதவி வந்த பொது அமைப்புகள், தனவந்தர்கள் போன்றோரும் தமது உதவிகளை தொடரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஆலயங்களும், கமநல கேந்திர நிலையங்களுக்குட்பட்ட கமக்கார அமைப்புகளும் தங்கள் அமைப்புக்களில் இருக்கு ஒரு பகுதி நிதியை அல்லலுறும் மக்களின்  நிவாரணத்திற்காக உதவ முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டு இது தொடர்பாக உரையாடியதாகவும் அவர்கள் தாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.