19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க நேற்று இலங்கை வணிக சபையின் பிரதிநிதிகள் சிலருடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
ரணில் விக்ரமசிங்கவின் அதிகார நோக்கமும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அதிகார நோக்கமும் 19 ஆம் திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளது. 19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது.
இந்த இரண்டில் ஒன்றை நாம் பின்பற்ற வேண்டும். ஒன்று நாம் முன்னர் இருந்த இடத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் முழுமையாக பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும்.
எமது யோசனைத் திட்டம் பாராளுமன்றத்தை கேந்திரமாகக் கொண்ட ஆட்சி முறைமையாகும்.
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பெரும்பான்மை உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறோம்.
நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தால் அவர்கள் அனைவரும் அதனை இரத்து செய்வதற்காக கைகளை உயர்த்துவார்கள் என அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.