நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரை இங்கிலாந்து அணி 3-2 என கைப்பற்றியுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற 5வது போட்டியில் சுப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது. மழை காரணமாக ஆட்டம் 11 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 11 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பாக குப்தில் 50 ஓட்டங்களையும், மன்ரோ 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சாம் ஹரன், டொம் ஹரன், ரஷீட், மொஹமட் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 11 ஓவர்களில் 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து சார்பாக பெய்ஸ்டோ 47 ஓட்டங்களையும், சாம் ஹரன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் டிரன்ட் பவ்ல்ட், குக்கலைன், சான்ட்னர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.
தொடர்ந்து சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஒரு 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
ஆட்டநாயகனாக பெய்ஸ்டோ தெரிவு செய்யப்பட்டார்.