பொலிவியாவின் செனட் சபையின் துணை சபாநாயகரான ஜென்னி அனிஸ் இடைக்கால அதிபராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டுள்ளார்.
பொலிவியாவின் அதிபரைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்வதேச தேர்தல் பார்வையாளர்களும் உறுதிப்படுத்தியிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு இடம்பெறுவதற்கு உதவியதாக தலைமைத் தேர்தல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் கைது செய்யப்பட்டனர். அதிபர் இவா மோரல்சும் கைது செய்யப்படலாம் எனும் நிலை ஏற்பட்டமையினால் அதிபர் பதவியை அவர் இராஜினாமா செய்து மெக்சிகோ நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை தொடர்ந்து ஆளும் கட்சியை சேர்ந்த அனைத்து மந்திரிகளும் தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர்.
தேர்தலில் இடம்பெற்ற முறைகேட்டினால் இராணுவ ஆட்சி இடம்பெறுவதற்கான சாத்தியம் நிலவியமையினால் ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காக மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அரசியல் குழப்பங்கள் சூழ்ந்துள்ள பொலிவியாவில், செனட் சபையின் துணை சபாநாயகரான எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜென்னி அனிஸ் இடைக்கால அதிபராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டுள்ளார்.