கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவருக்கு உளநல பரிசோதனை

councelling
councelling

நல்லூரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரின் உளநலத்தை பரிசோதிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் அந்த நபர் குழப்பம் விளைவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று புதன்கிழமையில் மாலை நல்லூர் கிட்டுப் பூங்காவில் இந்தப் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்திற்க்கு வந்திருந்த இந்த நபர் தகாத வர்த்தைகளை பேசி அங்கிருந்தவர்களை முகம்சுளிக்க வைத்தார். அவருடைய அநாகரிக செய்ற்ப்பாட்டை அடுத்து அங்கிருந்த பொலிஸார் அவரை எச்சரித்தனர். இதன்போது பொலிஸாருடன் முரண்பட்ட அவர் கூட்டத்தில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார்.

அங்கிருந்து புறப்பட்ட அவரை கிட்டுப் பூங்காவிற்க்கு பின்புறமாக வைத்து வழிமறித்த வீதி போக்குவரத்து பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதன் போது அவர் மதுபோதையில் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு எதிராக மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குற்றப்பத்திரம் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது. அவருக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. எதிரி குற்றவாளி என மன்றுரைத்தார்.

எதிரியின் உளநலம் தொடர்பில் கண்டறிவதற்காக அவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தி படிவம் 414இல் மன்றுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

இந்த செயல்முறைக்காக எதிரியை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.