சுவிஸ்குமார் விடுவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

vithya
vithya

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமாரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முதலாவது பிரதிவாதியான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க மன்றில் ஆஜராகிய போதும், இரண்டாவது பிரதிவாதியான முன்னாள் உப பொலிஸ் உத்தியோகஸ்தர் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜன் மன்றில் ஆஜராகவில்லை.

ஶ்ரீகஜன் காணாமல் போயுள்ள நிலையில் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையை அறிந்துகொண்டதன் பின்னர் , ஶ்ரீகஜன் சட்டரீதியாக நாட்டிலிருந்து வௌியேறியமைக்கு எவ்வித சாட்சியங்களும் இல்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

அவர் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வௌியேறியிருக்கலாம் என புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளதாகவும், எனினும், அதனை சரியாகக் கூற முடியாதுள்ளதாகவும் அதிகாரிகள் சாட்சியமளித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.