காதலி மற்றும் குழந்தையை எரித்த இடத்தில் வவுனியா காவல்துறையினர் தேடுதல்

PHOTO 2021 08 09 10 42 01
PHOTO 2021 08 09 10 42 01

திருமணம் செய்வதற்கு முன்னர் கர்ப்பமாகி குழந்தையைப் பெற்றெடுத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவரையும், குழந்தையையும் காதலன், கொலை செய்து எரித்த இடத்தில் காதலன் வழங்கிய தகவலின் அடிப்படையில் தடவியல் காவல்துறையினரின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருவதாவது,

வவுனியாவைச் சேர்ந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்த வேலை ஒன்றுக்கு சென்றுள்ளார். இதன்போது அப்பகுதியில் உள்ள 19 வயது யுவதியுடன் திருமணத்திற்கு முன் உறவு வைத்திருந்தார்.

இதன் போது அந்தப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இது பெண்ணின் உறவினர்களிற்கு தெரிய வந்ததையடுத்து யுவதிக்கு பிரசவமான பின் திருமணம் செய்வதாக கூறி வவுனியா மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கடந்த 2015 ஓகஸ்ட் 9 ஆம் திகதி அழைத்து சென்றுள்ளார். அங்கு காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின் காதலியையும் கொலை செய்து, உடல்களை தென்னை மட்டை, மண்ணெண்ணெய், சீனியை பயன்படுத்தி எரித்துள்ளார்.

எஞ்சிய பாகங்களை தோட்டத்தில் புதைத்துள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பரமேஸ்வரன் சஜிந்திகா மற்றும் ஆறு மாத குழந்தை ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 6 வருடங்களுக்கு பின் நேற்று (08.08) காதலனை கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த இருவரையும் கொலை செய்திருந்தமை தெரியவந்துள்ளது. கொலைக்கு பின்னர் இரு தடவைகள் சந்தேக நபர் வெளிநாட்டிற்கு சென்று மீள வவுனியாவுக்குத் திரும்பியதை விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து குறித்த இருவரையும் கொலை செய்து எரித்த இடம் மற்றும் எஞ்சிய உடற்பாகங்களை புதைத்த இடம் என்பவற்றில் காவல்துறையினர் தடவியல் காவல்துறையினரின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டு உடற்பாகங்களையும் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.