கொரோனா பரவல் காரணமாக கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அது குறித்து உறுதியாக எதனையும் கூற முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பத்திகை கண்ணோட்ட நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கொழும்பு நகரில் அபாய நிலை உள்ளதாக வெளியாகும் தகவல் தொடர்பில் இதன்போது இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
அதைப்பற்றி கூறுவது கடினமானது எனவும் கொழும்பின் சில பகுதிகளில் 7 நாட்கள் வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
எனினும், நேற்றைய தினம் பொரளையில் 20 கொட்டாஞ்சேனையில் 44 மட்டக்குளியில் 36 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவ்வாறான நிலையை அவதானிக்கும்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையிலும், நடமாட்டங்கள் இடம்பெற்றுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தால், இவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோதும் திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற சம்பவம்கூட பதிவாகியுள்ளது.
ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமாயின், அவர் தனது வீட்டிலேயே இருப்பாராயின், அவரின் வீட்டை சார்ந்தவர்களுக்கு தொற்று ஏற்படுமேதவிர, வெளிநபர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
நடமாட்டங்கள் இருந்தால் மாத்திரமே இவ்வாறான நிலை ஏற்படும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், குறித்த பகுதியில் குறிப்பிடத்தக்க அபாயம் உள்ளது. எனவே, அனைத்துத்தரப்பும் இணைந்து இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில், புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படாத பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்கக்கூடிய நிலைமை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.