இரு கவிதைகள் | அலைமகன் | தணல் செடி | தீபச்செல்வன்

sun and the sea hassan altamimi
sun and the sea hassan altamimi

தணல்ச் செடி

சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல
மறைந்திருந்த முகத்தில்
அடுக்கியிருந்த இரகசியங்கள்
சொல்லாத எண்ணற்ற கதைகள்
கலந்தன தீயில்

கருணைமிகு உன் புன்னகை
கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின்
சிறகுகளில் ஒழுகுகிறது தணல்

நெருப்பை தின்று
காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர்
கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக
வெடிக்கின்றன விதைகள்

கந்தகம் சுமந்து
வெடித்துருகிய இடத்தில்
தளைத்தது தணல் மலர்களுடன்
ஒரு செடி

அனல் கமழுமுன்
சமுத்திர மௌனத்தால்
கோணிற்று உலகு

இப் பூமி உள்ளவரை
முள்போலக் குற்றுமுன்
முடிவற்ற கையசைப்பு
மற்றும்
பெருங்கடல் உறைந்த வெண் புன்னகை
¤

sun and sea 3
sun and sea 3

அலைமகன்

இறுதி விடுமுறையில்
வீடு வருகையிலிட்ட
முத்தங்களின் நினைவிலுழல்கிறது
நீ வளர்த்த நாய்

கந்தகப் புகையால்
வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள்
நுழைந்துவிட்ட அம்மா
இன்னும் திரும்பவில்லை

ஓர் நள்ளிரவில்
நமது கடலில் நீ வெடிக்கையில்
அடித்திற்றுப் பெருமின்னல்

வெற்றிச்செய்தியாய் மாத்திரம்
வீடு திரும்புவாயெனத் தெரிந்திருந்தால்
இன்னும் சில முத்தங்களையேனும்
இட்டுத்தீர்த்திருப்பாள் அம்மா

இறுதித் தேநீரருந்திய
கோப்பையில் ஒட்டியிருக்கிறது
உன் புன்னகையினொரு துளி

நீ வெடித்த கடலில்
ஒரு மண்கோப்பை நீரெடுத்து
தாகம் நிரம்பியவுன் முகத்தைப்
பார்த்துப் பேசுகிறாள் அம்மா

அலைகளில் எழுமுன் பெயரை
உச்சரிக்கா நாளில்
இப் பெருங்கடல்
வற்றிப் போயிருக்கும்

¤

தீபச்செல்வன்