தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும்!

8 njn
8 njn

பௌத்த சிங்கள மக்கள் தனி சிங்கள தலைவரை தெரிவு செய்ததை போன்று தனி சிங்கள அரசாங்கத்தையும் தோற்றுவிக்க வேண்டும் எனத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்கள் அந்த அரசாங்கத்திற்குள் உள்வாங்கப்படுதல் அவசியமாகும் என்றும் கூறினார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தனி சிங்கள பௌத்த தலைவர் தெரிவு செய்ததை போன்று பொது தேர்தலின் ஊடாக தனி சிங்கள அரசாங்கமும் தோற்றம் பெற வேண்டும். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துக் கொண்ட நேரத்தில் இருந்து இன்று வரையில் தான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என்பதை பல செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்துள்ளார்.

நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையினை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பினையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும்.

பாராளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரச நிர்வாகத்திற்கும் தடையாக உள்ளன தனி சிங்கள அரசாங்கத்தில் அடிப்படைவாத கொள்கைகளற்ற தமிழ் – முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்பட வேண்டும்.

அடிப்படைவாதத்திற்கு துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.