ராஜீவ் கொலை குற்றவாளிகள் சட்டவிரோத காவலில் இருக்கின்றனரா ?

1 fd
1 fd

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுதலை செய்வதற்காக 2018 செப்டம்பர் 9ம் நாள் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் நாள் தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருக்கப்பட்டதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினி தரப்பில் முன்னிலையான வக்கீல் ராதாகிருஷ்ணன் வாதிடும்போது, தற்போது முன்கூட்டி விடுதலை கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை.

7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய பிறகு நியாயமற்ற முறையிலும், சட்டவிரோதமாகவும் சிறையில் அடைத்துள்ளதால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளோம்.

எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான்.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமென்றும், ஆளுநர் கையெழுத்து கூட போட தேவையில்லை.

தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமாகவே நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அப்போது, அரசு தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, மாநில அரசு நளினி உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக 2018 செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுனருக்கு பரிந்துரை அனுப்பியது என்றும், அமைச்சரவை பரிந்துரைத்தாலும் அதுதொடர்பாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் ஆளுனருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே என்றும், எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நளினி சட்டப்பூர்வ காவலில் இருக்கிறாரா என்பது குறித்து தெளிவுபடுத்த அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை பெப்ரவரி 18ம் நாளுக்கு தள்ளிவைத்தனர்.