வீடுகளில் இருந்தே கல்வி கற்க முடியுமென அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார் மாணவர்கள் வீடுகளில் இருந்தே கல்வி கற்கும் விதத்தில் கல்விக்கான ஊடகம் ஒன்று அவசியம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய அரச தொலைக்காட்சியில் அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளது என்றார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையில்
பல்கலைக்கழக மாணவர்களுக்கான விண்ணப்பத்திற்கான இறுதித் திகதியாக ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பபடிவங்கள் மற்றும் சான்றிதல்கள் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் கடந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரையில் சகல பாடசாலைகளிலும் இரு தினங்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என விசேட கோரிக்கை விடுத்திருந்தோம்.
எனினும் நிலைமைகளை கருத்தில் கொண்டு இப்போது மாற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படுகின்றதோ அன்றில் இருந்து இரண்டு வார காலத்திற்கு (14 நாட்கள் ) பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணபங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்கள் எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை.
பாடசாலைகளை ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பிக்கலாம் என இருந்தாலும் உறுதியாக எந்தவொரு தீர்மானமும் எடுக்க முடியாது உள்ளது. தற்போதுள்ள வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக எம்மால் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாத நிலைமை உள்ளது.
ஆகவே மாணவர்களுக்கான இணைய கற்கையை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். நாட்டில் பாடசாலைகளில் கற்கையை தொடரும் 47 இலட்சம் மாணவர்கள் உள்ளனர். அதேபோல் ஆரம்ப கல்வி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் இவர்கள் அனைவரையும் இணைத்தால் 5.5 மில்லியன் மாணவர்கள் நாட்டில் உள்ளனர்.
ஆகவே இவர்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் தலையீட்டில் துரித கல்விமுறை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம் எடுத்துள்ளோம். அரச ஊடகங்களில் தமிழ், சிங்கள அலைவரிசையில் மாணவர்களுக்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இந்த கற்கைகள் ஆரம்பிக்கப்படும். மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.