சகலரும் அவதானமாகச் செயற்படுவோம் – அரசு அறிவுறுத்து

4 ges
4 ges

“நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் கூட அடுத்த வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மோசமானதாக அமையலாம் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் இந்த அபாய நிலைமையைக் கருத்தில்கொண்டு நாம் அனைவரும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது.”

– இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-  

“இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான பாதிப்பாக கொரோனா வைரஸ் பரவல் உருவாகியுள்ளது. உலகின் பலம்மிக்க நாடுகள், செல்வந்த நாடுகள் என அனைத்தையுமே நாசமாக்கும் விதத்தில் கொரோனா வைரஸ் பரவல் அமைந்துள்ளது.

அவ்வாறான நிலையில் எமது நாட்டிலும் அதற்கான தாக்கம் உள்ளது. எனினும், ஜனாதிபதியின் தீர்மானங்களுடன் எமது வைத்திய, பாதுகாப்புத்துறையின் உதவியுடன் நிலைமைகளைக் கையாள முடிந்துள்ளது. எனினும் எதிர்வரும் வாரங்களில் நிலைமைகள் மிகவும் அச்சுறுத்தலான நிலைமை உருவாக்கும் என்றே சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே, அடுத்த அச்சுறுத்தல் நிலைமையைகே கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டியுள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது எவ்வாறு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு உலகையே அது மாற்றிப்போட்டதோ அதேபோன்று ஒரு நிலைமை இன்று உருவாகி வருகின்றது. இலங்கை போன்ற நாடுகளுக்கு இது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகவே, எமது கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டி செலுத்தல் செயற்பாடுகளில் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்  உலக சுகாதார ஸ்தாபனம் ஊடாகப் பலம் வாய்ந்த நாடுகளிடம் கேட்டுக்கொள்ளும் முயற்சிகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

அதேபோல் சார்க் நாடுகளின் மாநாடுகளைக் கூட்டி சகல நாடுகளும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் பொருளாதார மாநாட்டை நடத்தவும் வலியுறுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்” – என்றார்.