நடமாட்டத்தை கண்காணிக்க கூகுள் நிறுவனம் உலக நாடுகளுக்கு உதவி!!

0 ac
0 ac

கொரோனா பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் கண்டறிய உதவுவதற்கு கூகுள் நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.

ஒவ்வொருவரின் இருப்பிடம் குறித்து கூகுள் லொகேஷன் மூலம் திரட்டப்படும் தகவல்களை அந்தந்த நாட்டு அரசுகளுக்கு கூகுள் வழங்க உள்ளது.

இதற்காக 131 நாடுகளில் பிரத்யேக இணையதள வசதிகளை உருவாக்க இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா, சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகள், தங்கள் குடிமக்களின் நகர்வுகளை இணையம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன் படி இந்த சேவை வரும் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட இணைய சேவை மூலம் பூங்காக்கள், கடைகள் மற்றும் பொது இடங்களில் மக்களின் கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் எந்த அளவிற்கு அதிகரிக்கிறது? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பில்லியன் கணக்கான கூகிள் பயனர்களின் தொலைபேசிகளிலிருந்து இருப்பிடத் தரவைப் பகுப்பாய்வு செய்து இந்த வேலைத்திட்டத்தை கூகுள் செயற்படுத்தவுள்ளது..

தனது செயற்பாடு கூகுள் மப்ஸ், தங்கள் பயனர்கள் இருக்கும் இடத்தை வைத்து, எந்த இடத்தில் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது என்ற தகவலை பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழங்குகிறது.

131 நாடுகளின் மக்கள் நடமாட்டம் தற்போது தரவுகளாகக் கிடைக்கின்றன. உள்ளூரில் ஒரு கடை எப்போது கூட்டமாக இருக்கும் என்பதை மக்கள் எப்படி கூகுள் மப்ஸ் மூலமாக அறிந்து கொண்டார்களோ அதே முறையில்தான் நாங்களும் தெரிந்து கொள்கிறோம் என கூகுள் கூறியுள்ளது.

இப்படித் திரட்டப்படும் தகவல்களில் தனிப்பட்ட நபரின் அந்தரங்கத் தகவல்கள் எதுவும் இருக்காது என கூகுள் உறுதியளித்துள்ளது.

கூகுள் மப்ஸின் மூத்த துணைத் தலைவர் ஜென் ஃபிட்ஸ்பேட்ரிக், ‘கோவிட்-19’ பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க இதுபோலத் திரட்டப்படும் தரவுகள் உபயோகமாக இருக்கும் என்று பொது சுகாதார அதிகாரிகள் எங்களிடம் கூறினர்.

எனவே கோவிட்-19 சமுதாய நடமாட்டம் பற்றிய அறிக்கையை நாங்கள் முன்கூட்டியே வெளியிடுகிறோம். இதை வைத்து வீட்டிலிருந்து வேலை செய்வதில் என்ன நடமாட்டம் மாறியிருக்கிறது, ஒரே இடத்தில் தங்குவதில் என்ன மாறியிருக்கிறது உள்ளிட்ட இந்தத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரத் தேவையான விதிமுறைகளை வகுக்கத் தேவையான விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் ‘ என்று தனது வலைப்பூவில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களின் தரவுகள் இதில் கிடைக்கும். கடைசி 48-72 மணிநேர விவரங்கள் வரை இடம்பெறும். இதில் எவ்வளவு சதவீதம் நடமாட்டம் கூடியுள்ளது அல்லது குறைந்துள்ளது என்பது மட்டுமே குறிப்பிடப்படுகிறதே தவிர சரியான எண்ணிக்கை என்ன என்ற விவரங்கள் இருக்காது.

வரும் வாரங்களில் இன்னும் பல்வேறு நாடுகளையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த நாட்டு பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் தங்கள் மக்களைக் காப்பாற்ற ஏதுவான வழிமுறைகளைக் கையாள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.