மக்களே அவதானம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

8 nhg
8 nhg

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய சகல நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறையினர் முன்னெடுத்தாலும்கூட அடுத்துவரும் நாட்கள் மோசமாக இருக்கும். புத்தாண்டு வரையிலும் இலங்கையின் நிலைமையைச் சரியாக அறிவிக்க முடியாது. எனவே, மக்கள் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவர்கள் வீடுகளுக்குள் இருப்பதே சிறந்த வழி.”

– இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இப்போது வரையிலும் இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமைகளை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது. ஆனால், நாளாந்தம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமையில் அடுத்த ஒருவார காலம் மிகவும் கடினமான – மோசமான வாரமாக அமையும்.

நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு  இருக்கையில் எதிர்வரும் புத்தாண்டு வரையில் மிகக் கடினமான சுகாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

இறுக்கமான சட்ட திட்டங்களைப் பிறப்பித்து மக்களைக் கட்டுப்படுத்தி தொற்று நீக்கல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இலங்கையின் நிலைமை என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். எவ்வாறு இருப்பினும் புத்தாண்டு காலம் வரையில் சரியான எதிர்வுகூறல் ஒன்றை முன்வைப்பது கடினமானது.

ஆகவே, இப்போது நாட்டில் எவ்வாறான சட்ட திட்டங்களைப் பிறப்பித்து கட்டுப்பாடுகளை விதித்து நிலைமைகளைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் சுகாதாரத்துறை செயற்படுகின்றதோ அதே நடைமுறைகளை தமிழ் – சிங்களப் புத்தாண்டு வரையில் அல்லது அதற்குப் பின்னரும் சில நாட்களுக்குக் கடைப்பிடிக்க வேண்டும்.

அத்துடன் இப்போது வரையில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் எக்காரணம் கொண்டும் நடமாட வேண்டாம். அத்துடன் இந்தப் பகுதிகளில் தொற்று நோயாளர் இனங்காணப்படும் பட்சத்தில் உடனடியாக அவர்களை முகாம்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வீடுகளில் இருக்கும் நபர்களுக்கு இந்த நோய் அடையாளம் இருப்பின் 1390 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும். மூன்று மொழிகளிலும் வைத்தியர்கள் தொடர்புகளை ஏற்படுத்துவார்கள். வைத்தியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் தெரிவித்து தமது பாதுகாப்பை மக்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்” – என்றார்.