பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அரசியலில் மிகப்பெரும் சக்தி! – சரத் பொன்சேகா

sarath fonseka
sarath fonseka

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால் வடக்கு – கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாகத் திகழ்ந்திருப்பார். வடக்கு – கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார்.” என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போராட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவராக இருந்தாலும்கூட அவர் தோல்வி வருமென தெரிந்தும் இறுதிவரைப் போராட்டத்தை நடத்தியவர் என்ற விதத்தில் அவர் மீது ஒரு மரியாதை உள்ளது.

எவ்வாறு இருப்பினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க எந்த எண்ணமும் எமக்கு இருக்கவில்லை. அவ்வாறு அவரை உயிருடன் பிடித்திருந்தால் அவரும் இன்று அரசியலில் ஈடுபட்டிருப்பார்.

கே.பி. இன்று என்ன செய்கின்றார்? கருணா என்ன செய்கின்றார்? பிள்ளையான் என்ன செய்கின்றார்? இவர்கள் அனைவரும் இன்றைய அரசியல் தலைவர்களின் தோளில் கைபோட்டு அரசியல் செய்வதை நாம் பார்க்கின்றோம். பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று ராஜபக்சாக்களுடன் அரசியல் செய்கின்றனர்.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர் இன்று அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். அரசியல் ரீதியில் வடக்கு – கிழக்கை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு நபராக இருந்திருப்பார். ஆகவே, இறுதிப்போரில் அவர் கொல்லப்பட்டதே சரியென நினைக்கிறேன்” – என்றார்.