புலிகளுடனான போரை முடிப்பதே இந்திய அரசின் இலக்காக இருந்தது – பொன்சேகா

sarath ponnsekka 720x450 1
sarath ponnsekka 720x450 1

“தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மேற்கத்தேய நாடுகள் இருந்தன. ஆனால், அந்தப் போரை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது. என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போராட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாகரனுக்கும் சர்வதேசத்துடன் தொடர்புகள் இருந்தன. அவர்களுக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகள் சர்வதேச நாடுகள் மூலமாகக் கிடைத்தன.

ஆனால், இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்ததே உண்மை. இந்தியாவுக்குப் போரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளுடான போரில் இந்தியாவும் பாதிக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமரும் கொல்லப்பட்டார். இந்தியா கூறியதை தமிழீழ விடுதலைப்புலிகள் கேட்கவும் இல்லை.

ஆகவே, இந்தியா போர் நிறுத்த விடயங்களில் தலையிடவில்லை. பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு உதவிகளைச் செய்தன. ஆனால், மேற்கத்தேய நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தன. போரை யாராலும் வெற்றிகொள்ள முடியாது, போரால் பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்ற நிலைப்பாட்டில் அந்த நாடுகள் இருந்தன. சில நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் என்னுடன் நேரடியாகப் பேசி சமாதானப் பேச்சுக்கு வலியுறுத்தினர். ஆனால், போரை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் இருந்தோம்” – என்று தெரிவித்துள்ளார்.