சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வந்த இருவர் தடுத்து வைப்பு!

indel
indel

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் குறித்த இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இந்தியா அகதி முகாமில் இருந்து கடல் மார்க்கமாக வருகை தந்த புலேந்திரன் (வயது-33) மற்றும் அவரது மகளான சுபத்ரா (வயது-8) என தெரிய வந்துள்ளது.

இந்தியா தமிழ்நாடு கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் இருந்து கடல் மூலம் கடந்த திங்கட்கிழமை (1) அதிகாலை புலேந்திரன் (வயது-33) மற்றும் அவரது மகளான சுபத்ரா (வயது-8) ஆகிய இருவரும் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.

வருகை தந்த இருவரையும் புலேந்திரன் என்பவரின் தந்தையார் மடு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சின்ன பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ‘கொரோனா’ காலம் என்பதால் இந்தியாவில் இருந்து வந்த மகன் மற்றும் மகனின் மகள் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு மடுப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அழைத்துச் சென்ற நபர் அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன் படகு மூலம் வந்த தந்தை மற்றும் மகள் இருவரையும் மடுப் பொலிசார் கைது செய்து விசாரணைகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று (2) செவ்வாய்க்கிழமை மாலை மடு பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அம்புலன்ஸ் வண்டி மூலம் இராணுவத்தின் உதவியுடன் மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிலையத்தில் 14 நாட்கள் குறித்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாத நிலையில் மீண்டும் மன்னாரிற்கு அனுப்பி வைக்கப்பட்டு மன்னாரில் உள்ள அவர்களின் வீட்டில் மேலும் 14 நாற்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.என வைத்திய அதிகாரி ஒருவர் மேலும் தொரிவித்தார்.