மூன்றில் இரண்டே இலக்கு – பங்காளிகளிடம் வலியுறுத்திய மகிந்த

mahinda rajapaksa1 1
mahinda rajapaksa1 1

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இதுவே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இதற்கான பிரசாரங்களை நாட்டின் சகல பகுதிகளிலும் சுகாதார விதிமுறைகளுக்கமைய நாம் ஆரம்பிக்க வேண்டும்.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் எமக்குக் கிடைத்த வெற்றி முழுமை பெற வேண்டுமெனில் நாடாளுமன்றத்தின் ஆட்சி அதிகாரத்தை நாம் தனித்து நின்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் ஜனாதிபதிக்கு அது பலமாக இருக்கும். அத்துடன், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியும் நாமும் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றிக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

இம்முறை தேர்தலில் எதிர்க்கட்சிகள் எதுவும் எமக்குச் சவாலாக அமையாது. கொரோனா வைரஸ் மட்டுமே எமக்குச் சவாலாக அமைந்தது. அதுவும் முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாதபடியால்தான் ஆணைக்குழு மீது எல்லோரும் சந்தேகப்பட வேண்டி வந்தது. இருப்பினும் பொதுத்தேர்தல் திகதியை ஆணைக்குழு இன்று (நேற்று) அறிவித்துள்ளது.

எனவே, சுயாதீனமான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய பொறுப்பு ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது. இதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் ஆணைக்குழுவுக்கு நாம் வழங்கவேண்டும்” – என்றார்.