பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் அறிவுறுத்தியுள்ளன.
ஜூன் மாதம் 6 ஆம் திகதி 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து கல்வியமைச்சில் நேற்றைய தினம் (16) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர்.
விசேடமாக சமூக தூரத்தை பராமரித்தல், குழந்தைகளை மட்டுமே ஆசனங்களில் அமரவைத்து கொண்டு செல்லல், குழந்தைகளுக்கு தொற்றுநீக்கி பயன்படுத்தல், முகக்கவசங்கள் அணிவது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இருப்பினும், அனைத்து பாடசாலைகளும் ஜூலை 20 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளதால், போக்குவரத்து சேவையின் போது பாரிய சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டுமெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது குறிப்பிட்டார்.