நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,779 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 292 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த 720 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 198 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 161 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 12 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 பேரும், வெடிபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 389 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்புகளில் 07 ரிபிட்டர் வகை துப்பாக்கிகள், 01 நாட்டுத் துப்பாக்கி, 105 தோட்டாக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளில் 07 கைக்குண்டுகள் மற்றும் 34 இலட்சத்து 97 ஆயிரத்து 875 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.